தினமலர் திருச்சி-வேலூர் பதிப்பு வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி, ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கோயிலில் சேவையாற்றும் அர்ச்சகர்கள், அத்யாபகர்கள், வேதபாராயணிகள், ஓதுவார்கள் போன்றவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம், பிற ஊழியர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும் என, அறநிலையத்துறை ஆணையருக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலருக்கும் மே 19ல் இ-மெயில் மூலம் முறையீடு செய்தேன். அதில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது, அரசு தரப்பின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. எனவே, வாழ்வாதாரத்துக்கு திருக்கோயில் சேவைகளைச் சார்ந்திருக்கும் அர்ச்சகர்கள், பட்டாச்சார்யர்கள், பூஜாரிகள், அத்யாபகர்கள், வேதபாராயணிகள், ஓதுவார்கள், இசைக்கலைஞர்கள், திருவிளக்கு ஏந்தி செல்வோர் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய நிதியுதவியை எந்தவித நிபந்தனைகளையும் விதிக்காமல் வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தினமலர் திருச்சி-வேலூர் பதிப்பு வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி, ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:
கரோனா பரவல் தடுப்புக்காக கடந்த மார்ச் இறுதியில் அமலாக்கப்ட்ட ஊரடங்கு, தமிழகத்தில் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திருக்கோயில்களும் மூடப்பட்டுள்ளதால், வாழ்வாதாரத்துக்கு திருக்கோயில்களை மட்டுமே சார்ந்திருக்கும் அர்ச்சகர்கள், பட்டாச்சார்யர்கள், பூஜாரிகள், ஓதுவார்கள், அத்யாபகர்கள், வேதபாராயணிகள் உள்ளிட்டோர் வருமானம் இழந்து, பெரும் சிரமத்தில் உள்ளனர்.
திருக்கோயில்கள் மூடப்பட்டாலும், அன்றாட பூஜைகளை நடத்துவதற்காக, இவர்கள் அனைவரும் தினமும் கோயிலுக்கு வந்து வழக்கம்போல் சேவையாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட மாத சம்பளம் கிடையாது; கோயிலுக்கு வரும் நாட்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது.
திருக்கோயில்களின் வருமானத்தில் 35 சதவீதம் அறநிலையத்துறை அலுவலர்/ஊழியர் சம்பளத்துக்கும், 35 சதவீதம் கோயில் பராமரிப்புக்கும் செலவிடப்படுகிறது; எஞ்சிய 30 சதவீதம், கோயில்களின் உபரிநிதியாகப் பராமரிக்கப்படுகிறது. இந்த வகையில், அறநிலையத்துறையிடம் இப்போது ரூ.300 கோடிக்கு மேல் உபரிநிதி உள்ளது.
ஊரடங்கு காலத்தில் பணியாற்றாத அறநிலையத்துறை அலுவலர்/ஊழியருக்கு மாதம்தோறும் முழு சம்பளம் வழங்கப்பட்டு வரும் வேளையில், கோயிலுக்கு வந்து வழக்கமான பூஜை சேவைகளில் ஈடுபடும் அர்ச்சகர் உள்ளிட்டோருக்கு எந்த சம்பளமும் வழங்கப்படவில்லை.
அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூஜாரிகளுக்கு ஊரடங்கு நிவாரணமாக, உபரிநிதியில் இருந்து, மாதம்தோறும் தலா ரூ.ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த ஏப்ரலில் அறிவித்தது. ஆனால், 2வது தவணை நிவாரணத் தொகைக்கான பட்டியலில் 10 ஆயிரத்து 448 அர்ச்சகர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனரே தவிர, அத்யாபகர்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட பிற பணியாளர்கள் சேர்க்கப்படவில்லை.
எனவே கோயிலில் சேவையாற்றும் அர்ச்சகர்கள், அத்யாபகர்கள், வேதபாராயணிகள், ஓதுவார்கள் போன்றவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம், பிற ஊழியர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும் என, அறநிலையத்துறை ஆணையருக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலருக்கும் மே 19ல் இ-மெயில் மூலம் முறையீடு செய்தேன். அதில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது, அரசு தரப்பின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது.
எனவே, வாழ்வாதாரத்துக்கு திருக்கோயில் சேவைகளைச் சார்ந்திருக்கும் அர்ச்சகர்கள், பட்டாச்சார்யர்கள், பூஜாரிகள், அத்யாபகர்கள், வேதபாராயணிகள், ஓதுவார்கள், இசைக்கலைஞர்கள், திருவிளக்கு ஏந்தி செல்வோர் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய நிதியுதவியை எந்தவித நிபந்தனைகளையும் விதிக்காமல் வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மனுவில் ஆர்.ஆர்.கோபால்ஜி முறையிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.