கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ்-க்கான தண்டனை விவரங்களை, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், இன்று அறிவிக்க உள்ளது.

கராத்தே பயிற்சி பெற வந்த மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ்-க்கான தண்டனை விவரங்களை, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், இன்று அறிவிக்க உள்ளது.

சென்னை அண்ணாநகரில் கராத்தே, ஜூடோ போன்ற தற்காப்புக் கலை பள்ளி நடத்தி வந்தவர் கெபிராஜ். பயிற்சி பள்ளியில் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, மாணவி ஒருவர், கெபிராஜ் மீது புகார் அளித்திருந்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார், கெபிராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கெபிராஜ், பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து மேலும் சில மாணவிகள் அவர் மீது பாலியல் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை, விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பத்மா, இந்த வழக்கில் காரத்தே மாஸ்டர் கெபிராஜ் குற்றவாளி என தீர்ப்பளித்தார். தண்டனை குறித்த விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, கடவுள் மேல் ஆணையாக எந்த தவறும் செய்யவில்லை என்றும், நான் எந்த மாணவிகளுக்கும் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததில்லை எனவும், ஏழு ஆண்டுகளுக்கு பிறகு புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கு காரணமாக தனது குடும்ப மானம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி கராத்தே மாஸ்டர் கெபிராஜ், கதறி அழுதார்.

இதையடுத்து, அவருக்கான தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படும் என தெரிவித்த நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com