MS Ramesh judge order சகோதரிகளின் கணவர்கள் அரசு வேலையில் இருப்பதை காரணம் காட்டி, பெண்ணுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க மறுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சகோதரிகளின் கணவர்கள் அரசு வேலையில் இருப்பதை காரணம் காட்டி, பெண்ணுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க மறுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டம், கருங்குழி பஞ்சாயத்து தொடக்க பள்ளியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்த தண்டபாணி, கடந்த 2000ம் ஆண்டு உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது மகள் சுந்தரி, தனது சகோதரிகளின் அனுமதியைப் பெற்று, கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரி 2001ம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார்.

அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் நீண்ட நாட்களுக்கு கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்து, தனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரி, சுந்தரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்த போது,
அரசு தரப்பில், மனுதாரரின் மூன்று சகோதரிகளின் கணவர்களும் அரசு வேலையில் இருப்பது மட்டுமல்லாமல் மனுதாரரின் கணவரும் அரசு பணியில் இருப்பதால் அவரது குடும்பம் ஏழ்மை நிலையில் இல்லை எனவும், அவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

அரசுத்தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, கருணை அடிப்படையில் வேலை கோரி மனு அளித்த போது மனுதாரருக்கு திருமணமாகவில்லை எனவும் திருமணம் ஆன பின்னர் அதனை காரணம் காட்டி மனுவை நிராகரித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது தெரிவித்துள்ளார்.

மேலும், மனுதாரரின் சகோதரிகளின் கணவர்கள் அரசு வேலையில் இருப்பதால் அவர்கள் மனுதாரரை கவனித்து கொள்வார்கள் என கூறுவதை ஏற்க முடியாது எனவும், மனுதாரரின் கணவர் தற்காலிக ஊழியராக கடைநிலை பணியாளராக பணியாற்றி வரும் நிலையில் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற மனுதாரருக்கு உரிமை உள்ளது என கூறிய நீதிபதி,
அவரது தகுதிக்கு ஏற்ற வகையிலான பணியை நான்கு வாரங்களுக்கு வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

You may also like...