Judge jsyachandren கிடுக்கி பிடி கேள்வி
நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவை ஓராண்டுக்கு மேலாக சிறையில் வைத்திருந்தாலும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என பொருளாதார குற்றப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் யாதவ் மூன்றாவது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சொத்துக்களை முடக்குவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என உரிமையாளர்களிடமும், நிறுவனங்களிடமும் ஒப்புதல் பெற்று அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேவநாதன் யாதவுக்கு ஜாமின் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க கூடும் என பொருளாதார குற்றப்பிரிவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முனியப்பராஜ் வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, கடந்த ஓராண்டுக்கு மேலாக தேவநாதன் யாதவை சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாலும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என கண்டனம் தெரிவித்தார்.
மேலும், பொருளாதார குற்றப்பிரிவு வரலாற்றில் வழக்கை விரைந்து விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திரும்ப பெற்றுக் கொடுத்த ஒரு வழக்கை கூறுங்கள் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பின்னர், தேவநாதன் தரப்பில் தனக்கு குறைந்தது 6 வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கினால் தன்னுடைய சொத்துக்களை விற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, தனக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் ரொக்கங்கள் குறித்த விவரங்களை ஆகஸ்ட் 25 ஆம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய தேவநாதனுக்கு உத்தரவிட்டார்.
இதில், ஒரு சென்ட் நிலம் அல்லது ஒரு ரூபாயை மறைத்தாலும் கூட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நீதிபதி, தேவநாதன் யாதவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து அன்றைய தினம் முடிவெடுக்கப்படும் என தெரிவித்து விசாரணையை தள்ளி வைத்தார்.
…..