Gst officer case order நீதிபதிகள் அனிதா சுமந்த், ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில்

பாலியல் புகாருக்குள்ளான ஜி.எஸ்.டி. முதன்மை கமிஷனர் ரவிசெல்வன் மீதான புகாரை மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிள்ளது.

சென்னை ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய கலால் வரி முதன்மை கமிஷனராக இருந்த எஸ்.ரவி செல்வன் மீது, பெண் அதிகாரி ஒருவர் 2022 ஆம் ஆண்டில் பாலியல் புகார் அளித்தார். புகாரை விசாரித்த, பாலியல் புகார்களை விசாரிக்கும் உள் விசாரணை குழு, புகாருக்கு மறுப்பு தெரிவித்து, ரவி செல்வன் தரப்பில் வாரியத் தலைவருக்கு கடிதம் அனுப்பிய நிலையில், புகாரில் முகாந்திரம் உள்ளதாக மத்திய நிதித் துறை, மறைமுக வரிகள் வாரிய தலைவருக்கு, விசாரணை அறிக்கையை அனுப்பியது. அதனடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த தீர்ப்பாயம், பாலியல் புகார் குறித்தும், அதன் மீது தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சஸ்பெண்ட் உத்தரவில் குறிப்பிடவில்லை என்பதை சுட்டிக்காட்டி, அதை ரத்து செய்தும், உடனே பணியமர்த்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அதேசமயம், தன் மீதான பொய் புகாரில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கைவிடக்கோரியும், உள் புகார் குழு அமைக்கப்பட்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிடகோரியும் ரவி செல்வன் தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக மேல்முறையீடு மனுவும் விசாரணையில் உள்ளது.
இந்த இரு வழக்குகளும் நீதிபதிகள் அனிதா சுமந்த், ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ரவி செல்வன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் எம். ரவி மற்றும் பிரியா ரவி ஆகியோர், 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி, பல மாதங்கள் கழித்து 2022ஆம் ஆண்டுதான் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், 3 மாதத்திற்குள் புகார் அளிக்க வேண்டும் என்ற காலக்கெடுவை மீறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, உள் புகார் விசாரணை குழுவில் இடம்பெற்றவர்களில் சிலருக்கு எதிராகவும் ஆட்சேபம் தெரிவித்துள்ளதாகவும் வாதிட்டனர். மேலும், ஒரு தனியார் நிறுவனம் தொடர்பான பணியை சரியாக முடிக்காத காரணத்தினால், அவருக்கு மெமோ கொடுக்கப்பட்ட பிறகுதான், ரவி செல்வனுக்கு எதிராக பாலியல் தொல்லை புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

மத்திய அரசு மற்றும் புகார் அளித்த பெண் ஆகியோர் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்ட பின்னர், இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

அவர்கள் பிறப்பித்துள்ள தீர்ப்பில், ஏற்கனவே அமைக்கப்பட்ட உள் புகார் விசாரணை குழு களைக்கப்பட்டுவிட்டாதால், அந்த புகாரை விசாரிக்க புதிய குழுவை அமைக்க வேண்டும் என்றும், முந்தைய குழு உறுப்பினர்கள் யாரும் சேர்க்கப்படக் கூடாது என உத்தரவிட்டுள்ளனர். ஒரு வார காலத்திற்குள் குழுவை அமைத்து, உரிய விசாரணைகக்கு பின்னர் இரண்டு வாரங்களுக்குள் விசாரணை அறிக்கை வழங்கப்பட வேண்டும் எனவும், அனைத்து நடைமுறைகளையும் 3 மாதங்களில் முடிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளனர்.

மனுதாரர் ரவி செல்வன் தற்போது ஜார்க்கண்டில் பணிபுரிந்து வருவது, ஒழுங்கு நடவடிக்கை நடைமுறையில் இருப்பது, ஐசிசி குழுவினை புதிதாக அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஆகியவற்றை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க அவசியம் இல்லை என கூறி வழக்குகளை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com