நீதிபதி ஜி.கே.இளந்திரையன், pg medical counselling case order
தமிழக மருத்துவக் கல்லூரிகளில், காலியாக உள்ள 40 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புக்களுக்கான இடங்களுக்கு நான்கு வாரங்களில் கூடுதல் கவுன்சலிங் நடத்த மத்திய அரசுக்கும், மருத்துவ கவுன்சலிங் குழுவுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புக்களுக்கு 2024 – 25 ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இரண்டு கட்டங்களாக கவுன்சலிங் நடத்தப்பட்டது. கவுன்சலிங்குக்குப் பின், நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களில் உள்ள 5 ஆயிரம் இடங்களில், 600 இடங்கள் காலியாக உள்ளன.
கவுன்சலிங்கில் தேர்வானவர்கள், படிப்பில் சேராமல் கைவிட்ட காரணத்தால், இந்த காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த இடங்களுக்கு கூடுதல் கவுன்சலிங் நடத்த உத்தரவிடக் கோரி, தமிழகத்தைச் சேர்ந்த அஜிதா, பிரீத்தி, நவநீதம் என மூன்று மருத்துவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், கவுன்சலிங்கில் இடம் ஒதுக்கீடு பெற்றவர்கள், படிப்பில் சேராததால் தமிழகத்தில் மட்டும் 40 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை, கவுன்சலிங்கில் தேர்வாகாத மாணவர்களுக்கு கூடுதல் கவுன்சலிங் நடத்தி நிரப்பாவிட்டால், மதிப்புமிக்க மருத்துவப்படிப்பு இடங்கள் வீணாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய அளவில் காலியிடங்களுக்கான கவுன்சலிங் நடத்தும் வகையில் இந்த இடங்களை, மத்திய மருத்துவ கவுன்சலிங் குழுவில் சேர்த்து கூடுதல் கவுன்சலிங் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், தமிழகத்தில் காலியாக உள்ள 40 இடங்களுக்கும் நான்கு வாரங்களில் கூடுதல் கவுன்சலிங் நடத்த மத்திய அரசுக்கும், மத்திய மருத்துவ கவுன்சலிங் குழுவுக்கும் உத்தரவிட்டுள்ளார்.