நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தின் முன்னாள் பெண் கணக்காளர் ரம்யாவிற்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தின் முன்னாள் பெண் கணக்காளர் ரம்யாவிற்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரியில் பணிபுரிந்த பெண் கணக்காளர் ரம்யா அவரது உறவினர்களுடன் சேர்ந்து, ஊழியர்களின் ஊதியத்துக்கான வருமான வரித் தொகை 45 லட்சம் ரூபாயை வரித்துறைக்கு செலுத்தி விட்டது போல போலி ஆவணங்களை காட்டி விட்டு, அத்தொகையை தனது உறவினர்களின் கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்ததாக, அந்நிறுவனத்தின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதுதொடர்பான ழக்கில் தன்னை கைது செய்யக்கூடும் என கணக்காளர் ரம்யா முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் ரம்யா தரப்பில் 45 லட்சம் ரூபாயில் 21 லட்சம் செலுத்திவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

நடிகர் விஷால் தரப்பில் ரம்யாவிற்கு முன் ஜாமீன் வழங்க எந்த எதிர்ப்பும் தெரிவிக்காததால், ரம்யாவிற்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

15 லட்சம் ரூபாயை பிணை தொகையாக செலுத்தவும், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்திட நிபந்தனை விதித்து, முன் ஜாமீன் வழங்கியுள்ளார்.

You may also like...