கரூர் மாவட்டத்தில் சாலைகள் பணிகளில் முறைகேடு தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கரூர் மாவட்டத்தில் சாலைகள் பணிகளில் முறைகேடு தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், 2020 -21ல் கரூர் மாவட்டத்தில் ஆறு சாலைகள் அமைக்க, 130 கோடி ரூபாய் அளவுக்கு சங்கரானந்த் இன்ப்ரா என்ற தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டது.

டெண்டர் பெற்ற நிறுவனம் சாலையை அமைக்காத நிலையில் அந்நிறுவனத்துக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் 3 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், புகாரின் அடிப்படையில், முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு நெருக்கமான சங்கரானந்த் இன்ஃப்ரா நிறுவனத்துக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும், அவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் நக்கீரன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, புகார் அளித்த பின் ஒப்பந்தம் பெற்ற நிறுவனம், குறிப்பிட்ட அந்த சாலைகளை அமைத்துள்ளதாகவும், கண்துடைப்புக்காக நான்கு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும், இதன் மூலம் முறைகேடு நடந்ததை ஒப்புக் கொண்டுள்ளதால், இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் வாதிட்டார்.

தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனத் தெரிவித்தார்.

ஆனால், புகாரில் போதுமான ஆதாரங்கள் இல்லை என நீதிபதிகள் சுட்டிக்காட்டியதை அடுத்து, இந்த மனுவை வாபஸ் பெற அனுமதி கோரியதுடன், ஆதாரங்களுடன் புகார் அளிக்கவும் விஜயபாஸ்கர் தரப்பில் அனுமதி கோரினார்.

இதை ஏற்று வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்த நீதிபதிகள், புதிய புகாரை அளிக்க சட்டத்தின் அனுமதி உள்ளதாகவும், நீதிமன்ற அனுமதி தேவையில்லை எனவும் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

You may also like...