அறநிலையத்துறை நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பும் வரை காத்திருக்கும் அதிகாரிகளின் ஓராண்டு ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
அறநிலையத்துறை நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பும் வரை காத்திருக்கும் அதிகாரிகளின் ஓராண்டு ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில் நிலங்களை ஆக்கிரமித்து அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக வெங்கட்ராமன் என்பவரும், சொகுசு பங்களாவும், நூற்பாலையும் கட்டப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் என்பவரும் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்
மனுவில் குளம் தூர்வாருதல், கோவில் மண்டபம் புதுப்பித்தல் என்ற பெயரில் மணல் திருட்டு, நில ஆக்கிரமிப்பு, சட்டவிரோத கட்டுமானம் நடைபெறுவதாகவும், ஆக்கிரமிப்பாளர்கள் சில வருடங்களில் உரிமையாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு விடுவதாகவும் தெரிவித்திருந்தனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவில் நிலத்தை மீட்க கோரிய வழக்குகள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்து சமய அறநிலையத் துறை தரப்பில், நிலத்தை கணக்கிடவும், ஆக்கிரமிப்பை கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கோவில் நிலங்களை மீட்க, கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருப்பதாக தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், ஆக்கிரமிக்கப்பட்டு பெரிய கட்டுமானங்கள் கட்டப்பட்டது, மூன்றாவது நபர் நீதிமன்றத்திற்கு கொண்டுவந்த பிறகுதான் அறநிலையத்துறைக்கே தெரியவருகிறது என வேதனை தெரிவித்தனர். அறநிலையத்துறை ஆய்வாளர்களின் செயல்படாத காரணத்தினால், அவர்களின் ஒரு வருட சம்பளத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது எனவும், அவர்கள்தான் சம்பந்தப்பட்ட ஆணையரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும் என தெரிவித்தனர். உள்ளாட்சி அமைப்புகளும் எப்படி அனுமதித்தது என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், யார் அனுமதித்தார்கள், தடுக்காதவர்கள் யார் என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டிடம் கட்டிமுடிக்கப்படும் வரை காத்திருக்கும் அதிகாரிகள், அதன்பின்னரே நோடட்டீஸ் அனுப்புவதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள். நடவடிக்கை எடுக்காத அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் சரியாக இருக்கும் என தெரிவித்தனர். அறநிலையத்துறை வழக்குகளில் ஆஜராவதற்கு கூடுதலாக நியமிக்க உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.