நீதிபதிகள், அயோத்யா மண்டபத்தை ஸ்ரீராம் சமாஜ்ஜிடம் ஒப்படைக்கவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

சென்னை மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டப நிர்வாகத்தை அறநிலையத்துறை எடுத்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அதன் மீதான குற்றச்சாட்டு குறித்து புதிதாக விசாரணை நடத்தி முடிவெடுக்க அனுமதி அளித்துள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீ ராம் சமாஜ் என்ற அமைப்பின் மூலம் அயோத்யா மண்டபம் 1954 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வந்தது. அந்த அமைப்பு நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், சுவாமி சிலைகள் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் புகார்கள் கூறப்பட்டன.

இதையடுத்து, அயோத்யா மண்டபத்தை கடந்த 2013ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கீழ் கொண்டுவரும் வகையில் தக்காரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து ஸ்ரீராம் சமாஜம் அமைப்பு சார்பில் கடந்த 2014 ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி வி.எம். வேலுமணி உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஸ்ரீ ராம் சமாஜ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி ம்ற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஸ்ரீ ராம் சமாஜ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், அயோத்த்தியா மண்டபத்தில் ராமர், சீதை சிலைகள் வைக்கப்பட்டிருந்தாலும், ஆகம விதிகளின்படி அவை பிரதிஷ்டை செய்யப்படவில்லை எனவும், அதனால் கோவிலாக கருத முடியாது எனவும் வாதிட்டார்..

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், ஸ்ரீ ராம் சமாஜ்ஜின் பள்ளி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், மதரீதியான நடவடிக்கைகள் நடந்ததால் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும்,
பல வகைகளில் நிதி வசூலித்த இந்த அமைப்பு, வருவாய் விவரங்களை, அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை எனவும் உத்தரவை எதிர்த்து எப்போது வேண்டுமானாலும் அதிகாரிகளிடம் மேல் முறையீடு செய்யலாம் எனவும் குறிப்பிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை இன்றைக்கு தள்ளிவைத்திருந்தனர்.

இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், கோவில் என்பதற்கான தீர்க்கமான எந்த காரணங்களும் கூறாமல் அயோத்தியா மண்டபத்துக்கு தக்கார் நியமனம் செய்த உத்தரவு ரத்து செய்வதாக உத்தரவிட்டனர்.

மாற்றுத்தீர்வு உள்ளதாக கூறி பல ஆண்டுகளுக்கு பின் தள்ளுபடி செய்தது தவறு எனக் கூறி தனி நீதிபதி உத்தரவையும் ரத்து செய்த நீதிபதிகள், ஸ்ரீராம் சமாஜ்ஜிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து புதிதாக விசாரணை நடத்தலாம் என அறநிலையத் துறைக்கு அனுமதியளித்து உத்தரவிட்டனர்.

சங்கங்களின் கீழ் பதிவு செய்த ஸ்ரீ ராம் சமாஜ்ஜை கோவில் என்ற வரையரைக்குள் கொண்டு வர முடியாது என்றும், ஆகம விதிகள் படி தினசரி பூகைகள் நடத்தப்படவில்லை என்றும், 2004ல் அளிக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்காமல் கைவிட்ட நிலையில் 2013ல் அதே புகார்தாரரால் அளிக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர். பிரதோசம் மற்றும் ராம நவமி பூஜைகள் மட்டுமே அயோத்யா மண்டபத்தில் நடத்தப்படுகிறது என்ற நிலையில், சிலைகளை வைத்து பக்தர்களை பூஜிக்க வைத்து தட்சனை பெறுவதை அறநிலையத்துறை நிரூபிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

முறையான நடைமுறைகளை பின்பற்றி, அனைத்து குற்றச்சாட்டு குறித்தும் நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் பெற்று, ஆதாரங்களை சேகரித்து, சமாஜ்ஜிற்கு வாய்ப்பளித்து, புதிதாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அயோத்யா மண்டபத்தை ஸ்ரீராம் சமாஜ்ஜிடம் ஒப்படைக்கவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

 

 

 

You may also like...