நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு, யானைகள் வழித்தடங்களை

நீலகிரி மாவட்டம், சேகூர் யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை ஆறு மாதங்களில் துவங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், சேகூர் பகுதியை யானைகள் வழித்தடமாக அறிவித்த தமிழக அரசு, உதகமண்டலம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தனியார் வனமாக அறிவித்து 1991 ம் ஆண்டு அரசு உத்தரவு பிறப்பித்தது.

சேகூர் பகுதியை யானைகள் வழித்தடமாக அறிவித்ததை எதிர்த்து தனியார் ரிசார்ட் உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசு உத்தரவை உறுதி செய்ததுடன், சேகூர் பகுதியில் உள்ள சொத்துக்கள் தொடர்பான ரிசார்ட் தரப்பு குறைகளை விசாரிப்பதற்காக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான குழு, சேகூர் யானைகள் வழித்தடத்தில் உள்ள நிலங்களை தனியார் வனமாக அறிவித்த பின், அதாவது 1991 ம் ஆண்டுக்கு பின், அந்தப் பகுதியில் நிலங்கள் வாங்கி இருந்தால் அது செல்லாது, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க வேண்டும், இந்த பகுதிகளில் வணிக நடவடிக்கைகள் இருக்க கூடாது என்பன உள்ளிட்ட பல உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவுகளை எதிர்த்து தனியார் ரிசார்ட் உரிமையாளர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு, யானைகள் வழித்தடங்களை பாதுகாக்கும் வகையில், சேகூர் பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க வேண்டும் எனவும், 1991 ம் ஆண்டுக்கு பின் வாங்கப்பட்ட நிலத்தின் விற்பனை செல்லாது எனவும் வணிக நடவடிக்கைகள் இருக்க கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி குழு பிறப்பித்த உத்தரவுகளை உறுதி செய்தது.

அதேசமயம், தனியார் நிலங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ஓய்வுபெற்ற நீதிபதி குழு உத்தரவை ஏற்க மறுத்த நீதிபதிகள், யானைகள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல், வேலி, மின்வேலிகள் அமைக்காமல், விவசாய பணிகளை மேற்கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டனர்.

மேலும், 2010 ம் ஆண்டு அரசாணையின் அடிப்படையில், சேகூர் யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் நிலங்களை, கையகப்படுத்தும் நடவடிக்கைகளை ஆறு மாதங்களில் துவங்க அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்குகளை முடித்து வைத்தனர்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com