திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், உள்ளிட்டோர் மீதான வழக்கு திரும்ப பெறப்பட்டுவிட்டது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், உள்ளிட்டோர் மீதான வழக்கு திரும்ப பெறப்பட்டுவிட்டதாக் காவல்துறை தெரிவித்ததை ஏற்ற எம்.பி. – எம்.எல்.ஏ. சிறப்பு நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் கடந்த 2018 ஏப்ரல் 4ம் தேதி முழு அடைப்புப் போராட்டமும், ஆா்ப்பாட்டமும் நடத்தின. சென்னை அண்ணா சாலையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் திருநாவுக்கரசா், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வீரபாண்டியன், காங்கிரஸ் கட்சியிலிருந்த கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனா். இதேபோல எழும்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதியின்றி நடைபெற்ற தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஸ்டாலின், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மீதும், வைகோ உள்ளிட்டோர் மீது எழும்பூர் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. – எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அலிசியா முன்பு விசாரணைக்கு வந்தது
அப்போது காவல்துறை தரப்பில் அனைத்து தலைவர்கள் மீதான திருவல்லிகேணி காவல் நிலையத்தில் பதிவான வழக்கை திரும்பப்பெற்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதை ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்து வைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.