மெட்ராஸ் ரிபோர்டர்ஸ் கில்டு தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி மோகன்ராஜ் நியமனம் சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு
மெட்ராஸ் ரிபோர்டர்ஸ் கில்டு தேர்தலை நடத்த
ஓய்வு பெற்ற நீதிபதி மோகன்ராஜ் நியமனம்
சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு
சென்னை, செப். 10: மெட்ராஸ் ரிபோர்டர்ஸ் கில்டு நிர்வாகிகள் தேர்தலை நடத்த சென்னை உரிமையியல் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மோகன் ராஜை நியமனம் செய்து சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள பாரம்பரியமிக்க செய்தியாளர்களுக்கான மெட்ராஸ் ரிபோர்டர்ஸ் கில்டு கடந்த 1957ல் தொடங்கப்பட்டது. இந்த சங்கத்திற்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் நடத்தப்படவில்லை. இதையடுத்து, நிரூபர்களின் கோரிக்கையைடுத்து கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தேர்தல் முறையாக நடைபெறவில்லை. புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படவில்லை. பழைய உறுப்பினர்களின் பதிவு புதுப்பிக்கப்படவில்லை. தேர்தல் அறிவிப்பில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. எனவே, புதிய நிர்வாகிகள் தேர்தலுக்கான அறிவிப்பை ரத்து செய்யவேண்டும். தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மூத்த உறுப்பினர் அ.வில்சன் ஆசீர்வாதம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு முதலாவது உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பி.சந்திரசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் ராஜரத்தினம் ஆஜராகி, தேர்தல் அறிவிப்பு முன்னுக்கு பின் முரணாக உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் தேர்தலை குறிப்பிட்ட நாளுக்கு முன்பே நடத்திவிட்டனர். போட்டியில்லாமல் நிர்வாகிகள் ேதர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று வாதிட்டார்.
கில்டு சார்பிலும், அதன் முந்தைய நிர்வாகள் சார்பிலும் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரருக்கு வழக்கு தொடர அதிகாரம் இல்லை என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மெட்ராஸ் ரிப்போர்டர்ஸ் கில்டுக்கு தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மோகன்ராஜ் நீதிபதி ஆணையராகவும், அவருக்கு உதவியாக வழக்கறிஞர் அப்துல் சுபான் வழக்கறிஞர் ஆணையராகவும் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் ரிபோர்டர்ஸ் கில்டு தேர்தலை விரைவில் நடத்தி அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.