சென்னையில் ஓய்வுபெற்ற நீதிபதி முன்பே அவரது பாதுகாவலருக்கு அரிவாள் வெட்டு.

சென்னையில் ஓய்வுபெற்ற நீதிபதி முன்பே அவரது பாதுகாவலருக்கு அரிவாள் வெட்டு.

சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசிப்பவர் சக்திவேல்(52). ஆயுதப்படை காவலரான இவர் ஓய்வு பெற்ற நீதிபதியும், காவலர்கள் நல வாரியத்தின் தலைவருமான சி.டி. செல்வம் என்பவருக்கு பாதுகாவலராக பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையில் இன்று காலை நீதிபதியுடன் காரில் அசோக்நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அசோக் நகர் சிக்னல் ஹாட்சிப்ஸ் அருகே வரும் போது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. உடனே சக்திவேல் காரில் இருந்து இறங்கி போக்குவரத்தை சரிசெய்ய முன்றுள்ளார். அப்போது அந்த வழியாக மதுபோதையில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் சக்திவேலிடம் தகராறில் ஈடுபட்டதுடன் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த அசோக் நகர் போலீசார் படுகாயமடைந்த சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவல் அறிந்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சம்பவயிடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அசோக் நகர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேரை சிசிடிவி காட்சிகளை வைத்து தேடிவருகின்றனர்.

You may also like...