ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலைக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்திய கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது
ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலைக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்திய கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சென்னை ஐஐடி முதலாமாண்டு மாணவியான கேரளாவை சேர்ந்த பாத்திமா, கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாத்திமா தற்கொலைக்குக் காரணமான ஆசிரியர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து சைதாப்பேட்டை நீதிமனற்த்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் அஷ்ரப், முஸ்தபா உள்ளிட்ட 9 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, முற்றுகைப் போராட்டத்துக்கு பின் எந்த அசம்பாவித சம்பவங்களோ, வன்முறையோ நடைபெறவில்லை எனவும், இந்த வழக்கில் மனுதாரர்களுக்கு எதிராக எந்த ஆரம்பகட்ட முகாந்திரமும் இல்லை எனவும் கூறி, கேம்பஸ் பிரண்ட்ஸ் அமைப்பு நிர்வாகிகள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.