இரு பெண்கள் சேர்ந்து வாழும் முடிவு குறித்து அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் உளவியல் ஆலோசனை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஒரே பாலினத்தவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வது தொடர்பான வழக்குகளில் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் நீதிமன்றங்கள் வழங்கியுள்ள தீர்ப்புகளை ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மதுரையை சேர்ந்த இரு பெண்கள் தோழமையுடன் பழகத் தொடங்கி, பின்னர் அது காதலாக மாறியதால் பரிய மனமில்லாமல் சேர்ந்து வாழ விரும்பியுள்ளனர். இருவரின் பெற்றோருக்கும் இந்த முடிவு அதிர்ச்சி அடைந்ததால் இருவரையும் பிரிக்க முயற்சித்த நிலையில் மதுரையிலிருந்து கிளம்பி சென்னை வந்துவிட்டனர்.
தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்கி இருவரும் வேலை தேடி வரும் நிலையில், தங்களுக்கு பாதுகாப்பு கோரி இருவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த மாதம் தொடரப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பிற்கும் இடையே சுமூக உடன்பாடு ஏற்படாததால், இரு பெண்கள், பெற்றோர், காவல்துறை என அனைத்து தரப்பையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.
பின்னர் அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், LGBTQIA என்று சொல்லப்படும் ஒரே பாலினத்தவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வது தொடர்பான வழக்குகளில் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் நீதிமன்றங்கள் வழங்கியுள்ள தீர்ப்புகளை ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் மனுதாரர்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் கருத்துகளை விவரமாக தீர்ப்பில் சேர்க்க ஏதுவாக, அனைவரிடமும் உளவியல் கருத்துக்களை பெற வேண்டியது அவசியம் என்பதால், உளவியல் நிபுணர் வித்யா தினகரன் என்பவரை நியமித்து, உளவியல் ரீதியாக அணுகி அதன் அறிக்கையை மூடிமுத்திரையிட்ட உறையில் ஏப்ரல் 26ல் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.