Rti case GRSJ bench

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்காக இணையதள பக்கத்தை திறக்காதது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை துவங்கவில்லை எனக் கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கல்வி உரிமைச் சட்டத்தின் படி மத்திய அரசு உரிய நிதியை தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும் எனவும் மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைக்கவில்லை எனக் கூறாமல் தனியார் பள்ளிகளுக்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன், தனியார் பள்ளிகள் இயக்குனர் குப்புசாமி ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் தனியார் பள்ளிகள் இயக்குனர் தாக்கல் செய்த பதில் மனுவில், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மறுத்ததால், மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்றும் மாநில அரசு தனது பங்காள 40 சதவீத நிதியை ஒதுக்க தயாராக உள்ள போதும், மத்திய அரசு 60 சதவீத நிதியை ஒதுக்காததால் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த இயலவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயர் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கவில்லை என்றும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, தமிழக கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ ரவீந்திரன், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும் சம பொறுப்பு உள்ள போதிலும் மாநில அரசுக்கு எதிராக மட்டுமே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் அந்த வழக்கு செப்டம்பர் ஏழாம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

கல்வியாண்டு துவங்கி இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான இணையதள பக்கத்தை இன்னும் திறக்காமல் இருப்பது ஏன் எனவும்
மத்திய மாநில அரசுகளுக்கு இடையில் நிதி ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை காரணமாக மாணவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, கௌரவம் பார்க்காமல் இணையதள பக்கத்தை திறக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொண்டனர்.

இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், தமிழக அரசு மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளதாகவும், அரசுக்கு எந்த கௌரவ பிரச்சனையும் இல்லை என்றும் விளக்கம் அளித்தார் .

இதையடுத்து, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணையை நீதிபதிகள், செப்டம்பர் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com