Madras high court news today sep 11

[9/9, 14:11] Sekarreporter: வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் அனுமதி பெறாமல் கட்டுமானங்களை மேற்கொண்ட சென்னை.மாநகராட்சி பொறியாளர் மீதான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வடபழனியை சேர்ந்த என்.ஜி.தெய்வகடாட்சம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், வடபழனி நெற்குன்றம் பாதையில் அமைந்துள்ள 2000 சதுர அடி நிலம் வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமானது என்றும், அதில் கட்டுமானங்களை மேற்கொள்ள அறநிலையத்துறையிடம் அனுமதி பெறாமல், சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டல செயற் பொறியாளர் வி.பெரியசாமி 47 லட்ச ரூபாய் மதிப்பிலான இரு கட்டிடங்களை கட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த கட்டடங்களில் அம்மா உணவகம், நியாய விலை கடை ஆகியவை இயங்கி வருவதாகவும், சென்னை குடிநீர் வாரியம், மின் வாரியம் ஆகியவற்றின் அலுவலகங்கள் அமைந்திருப்பதாக பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குத்தகை காலம் 2015ஆம் ஆண்டு முடிந்த நிலையிலும், அம்மா உணவகமும், நியாய விலை கடையும் தொடர்ந்து இயங்கிவருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பொறியாளர் பெரியசாமி மீது நடவடிக்கை எடுக்கும்படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசு, இந்துசமய அறநிலையத்துறை, சென்னை மாநகராட்சி ஆகியோரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, தெய்வகடாட்சம் அளித்த புகாரில் விசாரணை தொடங்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கும் பணிகள் நடந்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவுசெய்த நீதிபதி, குற்றச்சாட்டுக்கு உள்ளான பொறியாளர் பெரியசாமி விளக்கம் அளிக்க வாய்ப்பளித்து, விசாரணையை முடித்து சட்டத்திற்குட்பட்டு 4 வாரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி அறநிலையத்துறை இணை ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
[9/9, 16:12] Sekarreporter: நலிவடைந்தவர்களையும், ஏழைகளையும் மேம்டுத்துவதற்காகத்தான் வரிவிலக்கு இருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்திடக் கூடாது என வலியுறுத்தி உள்ளது.

ராடெல் (Radel) எலக்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனம் தாக்கல் செய்துள்ள வழக்கில், இந்திய இசை கருவிகளுக்கு வரி விலக்கு அளிக்கும் அரசாணைப்படி, தங்கள் நிறுவன தயாரிக்கும் கருவிகளுக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்மென கோரிக்கை வைத்திருந்தது. வரி விலக்கு அளிக்க மறுத்த வணிக வரித்துறை ஆனையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் பி.வி.அனுராதா ஆஜராகி இந்திய இசைக் கருவிகளுக்கு விலக்கு என அறிவித்த தமிழ்நாடு அரசு, மின்னனு முறையில் உற்பத்தியாகும் தங்கள் நிறுவன இசைக் கருவிகளுக்க்கு வரிவிலக்கு வழங்க மறுக்க முடியாது என வாதிட்டார்.

தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கறிஞர் வி.நன்மாறனும் ஆஜராகி, தலைமுறை தலைமுறையாக இசைக்கருவிகளை தயாரிக்கின்ற, ஏழ்மை நிலையில் இருக்கின்ற கலைஞர்களை ஊக்குவிப்பதற்காகவே வரிவிலக்கு வழங்கப்படுவதாகவும், மின்னணு முறையில் இயங்குகின்ற இசைக்கருவிகளுக்கு வழங்க முடியாது என தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழ்நாடு ஜி.எஸ்.டி. சட்டத்தில் வீணை, வயலின், கடம், மிருதங்கம்,
தவில், மகுடி, பஞ்சலோக வாத்தியம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இசைக்கருவிகளை விற்பனை செய்யும்போது வரிவிலக்கு அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டி, வரிவிலக்கு கோரிய நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தார்.

மேலும் வரிவிலக்கு என்பது சலுகை மட்டுமே என்றும், விதிகளுக்கு உட்பட்டு அளிக்கப்படும் அந்த சலுகையை உரிமையாக கோரமுடியாது என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். வரிவிலக்கு அளிப்பதை வழக்கமாக பின்பற்றினால், பெரிய அளவிலான உற்பத்தியாளர்கள் அதிக லாபம் ஈட்ட வகை செய்துவிடும் என அறிவுறுத்தி உள்ளார். விலைவாசியால் பாதிக்கப்பட்டவர்களையும், நலிவடைந்தவர்களையும், ஏழை மக்களையும் மேம்படுத்துவதற்காக மட்டுமே வரிவிலக்கு அமைய வேண்டுமே தவிர, அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்திடக் கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
[9/10, 12:32] Sekarreporter: விமானங்களில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே அறிவிக்கப்படும் அவசரகால முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை மாநில மொழிகளில் அறிவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்துள்ள வழக்கு மனுவில், அவசர காலங்களில் பயணிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், விமானத்தில் இருந்து தப்பிக்க அவசர வழி எங்கிருக்கிறது, ஆக்ஸிஜன் குறைபாட்டால் மூச்சுத் திணறல் ஏற்பட்டால் தற்காலிக ஆக்சிஜன் முகக் கவசம் பயன்படுத்தும் முறைகள், சீட் பெல்ட் அணியும் முறைகள், நீர் நிலைகளில் விழுந்தால் தப்பிக்க விமானத்தில் அதற்கான பிரத்யோக ஆடைகள் இருக்கும் இடம் மற்றும் அணியும் முறை குறித்த செயல்முறை விளக்கங்கள் மற்றும் விளக்க கையேடு ஆகியவை விமானம் புறப்படுவதற்கு முன்பாக வழங்கபட்டு வருவதை குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு தற்போது வெளியிடப்படும், கொடுப்படும் அறிவிப்புகள் தற்போது ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே வழங்கப்படுவதாகவும், நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீத மக்கள் மட்டுமே ஆங்கிலமும், இந்தியும் தெரியாதவர்கள் தெரிந்தவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

அவசர காலத்திற்கான இன்றியமையாத விளக்கங்கள் மக்களுக்கு புரிகிற மொழியில் இருக்க வேண்டும் என்பதால், பயணிகள் பாதுகாப்பு கருதி, பாதுகாப்பு அறிவிப்புகள் மற்றும் விளக்க கையேடுகளை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அட்டவணை 8 ல் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், அசாமி, குஜராத்தி, பெங்காலி, காஷ்மீரி, உள்ளிட்ட 23 மொழிகளிலும் வழங்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

இந்திய நிறுவனங்களால் நடத்தப்படும் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ் ஜெட், கோ ஏர், இண்டிகோ, ஏர் ஏசியா மற்றும் டாட்டா விஷ்ட்டா ஆகிய விமானங்களில் இதை அமல்படுத்துவதுடன், விமானம் புறப்படும் மற்றும் விமானம் சென்றடையும் மாநிலத்தின் ஆட்சி மொழியில் அறிவிப்புகள் வெளியிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் வரும் திங்கட்கிழ்மை விசாரணைக்கு வரவுள்ளது.
[9/10, 13:13] Sekarreporter: சென்னை, செப். 11: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரை விடுதலை செய்த மகளிர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
திருவள்ளூரை சேர்ந்தவர் விக்டர் ஜான். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் பக்கத்து வீட்டு 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த விஷயத்தை வேறு ஒருவரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார். தொடர்ந்து பலாத்காரம் செய்ததில் அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இந்த விபரம் தெரிந்தவுடன் சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க தனியார் மருத்துவமனை டாக்டரிடம் கூட்டி சென்றுள்ளார். ஆனால், குழந்தை வளர்ச்சி அடைந்துவிட்டதால் கர்ப்பத்தை கலைக்க முடியாது என்று டாக்டர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சிறுமியை தனக்கு வேண்டப்பட்டவர்கள் வீட்டில் வைத்து கவனித்துள்ளார். இதையடுத்து, அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் மூலம் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகளை மீட்ட பெற்றோர் திருவள்ளூர் மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விக்டர் ஜான் மீது பாலியல் பலாத்காரம், மிரட்டல் மற்றும் போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
அவருக்கு உதவியதாக செல்வம், கிருபாகரன், ராஜேந்திரன், பியூலா உள்ளிட்டோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த வழக்கு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சம்பவ காலத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி 18 வயதுக்கு கீழ் இருந்தார் என்பதை போலீஸ் தரப்பு நிரூபிக்க தவறியதால் விக்டர் ஜான் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மகளிர் போலீஸ் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசு வக்கீல் எஸ்.சுகேந்திரன் ஆஜராகி, சிறுமி பிறந்தது 1998 பிப்ரவரியில். அவர் 2014லில் இருந்து பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அந்த நேரத்தில் சிறுமிக்கு 16 வயதுதான். சிறுமியின் வயது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் கொடுத்த சான்றிதழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: சிறுமியின் பிறந்த தேதி தொடர்பான சான்றிதழில் அவர் 1998ல் பிறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சிறுமியின் சம்மதத்துடன்தான் உறவு கொண்டதாக விக்டர் ஜான் தரப்பில் வாதிட்டதை ஏற்க முடியாது. சம்பவம் நடந்தபோது சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை. அவரை திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியுள்ளது போதிய ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே, விக்டர் ஜானை விடுதலை செய்த திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. விக்டர் ஜானுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை சிறுமியின் குழந்தையின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். அந்த குழந்தை உரிய வயதை எட்டியவுடன் வட்டியுடன் அந்த தொகை வழங்கப்பட வேண்டும். விக்டர் ஜானுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்த மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகல், விசாரணை அதிகாரிகள், அரசு வக்கீல்களுக்கு போக்சோ சட்டம் குறித்த பயிற்சி தரப்பட வேண்டும் என்று இந்த நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்துகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
[9/10, 19:35] Sekarreporter: நீதிமன்றங்களில் ஏ4 அளவிலான தாள்களை பயன்படுத்துவது குறித்து அறிவிப்பாணை வெளியிடுவதை உறுதி செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஜிட்டின் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,
நீதிமன்றங்களில் வழக்குகளுக்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வெள்ளை மற்றும் பச்சை நிற தாள்கள் தேவைப்படுவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் காகிதங்கள் தயாரிப்பதற்காக 15 மில்லியன் டன் மரங்கள் வெட்டப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒரு காகிதத்தை தயாரிக்க 10 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க உயர் நீதிமன்றம் மற்றும் சார்பு நீதிமன்றங்களில் காகிதம் இல்லாத மனு தாக்கல் முறையை கொண்டு வர வேண்டும் என உச்ச நீதிமன்றமும் இதை வலியுறுத்தியுள்ளதாகவும், மேற்கு வங்கம், கர்நாடகா, கேரளா, சிக்கிம், திரிபுரா மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டிலும் நீதிமன்றங்களிலும், தீர்ப்பாயங்களிலும் இதுபோன்ற இ-பைலிங் முறையை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தமிழ்நாட்டில் இ-பைலிங் முறை ஏற்கனவே கொண்டுவரப்பட்டு உள்ளதாகவும், ஏற்கனவே மனு தாக்கல் செய்யும் முறையிலிருந்து இ பைலிங் முறைக்கு மாறுவது படிப்படியாகத்தான் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். இ-பைலிங் முறை தொடர்பாக மநுதாரர் வீடியோ ஒன்றை தயாரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளதால், அதை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் உருவாக்கி நீதிமன்ற பதிவாளரிடம் தரவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து நீதிமன்றங்களிலும் பயன்படுத்தப்படும் தாள்கள் ஒரே மாதிரியான ஏ4 அளவில் இருப்பது தொடர்பாக அறிவிப்பாணை வரும் என்று நீதிமன்றம் எதிர்பார்ப்பதாகவும், உரிய அறிவிப்பாணை விரைவில் வரும் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழ்க்கு விசாரணையை நவம்பர் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[9/10, 20:56] Sekarreporter: குறிப்பிட்ட அடையாள அட்டை இல்லை என்பதற்காக கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் எவரும் விடுபடக்கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மறுவாழ்வு முகாம்களில் வசிக்காத இலங்கை தமிழர்களுக்கு ரேசன் பொருட்களை வழங்குமாறும், ஏதாவது ஒரு அடையாள அட்டையை காட்டினாலே தடுப்பூசி பேடவும் உத்தரவிடக்கோரி சென்னை பல்கலைகழக பேராசிரியரான ராமு மணிவண்ணன் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கொரோனா ஊரடங்கு காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தள்ர்த்தபட்டதால், சம்பந்தபட்டவர்களே நேரடியாக் பொருட்களை பெற முடியும் எனவும், நீதிமன்றம் உத்தரவிட வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும், ஏதாவது ஒரு அடையாள அட்டையை காட்டினாலே அதை ஏற்றுக்கொண்டு அவர்களுகளுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கும்படியும், தடுப்பூசி செலுத்தாமல் யாரும் விடுபடக்கூடாது என்றும் தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version