Former admk mla case nskj no stay

சாத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன் மீதான ஆள் கடத்தல் மற்றும் மிரட்டல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

சிவகாசி சக்தி நகரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் கம்மாபட்டி ரவிச்சந்திரன். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு சாத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன், தங்கமுனியசாமி, நரிக்குடியைச் சேர்ந்த ஐ.ரவிச்சந்திரன் ஆகியோருடன் சேர்ந்து வேண்டுராயபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையை விலைக்கு வாங்கி நடத்தி வந்தனர். இதன் பிறகு, 2019-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ராஜவர்மன் உள்ளிட்ட மூவரும் தொழிலில் இருந்து விலகினார்.

இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் தன்னை கடத்தி, 2 கோடிரூபாய் கேட்டு மிரட்டியதாக, ராஜவர்மன் உள்ளிட்டோருக்கு எதிராக ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம், முன்னாள் அதிமுகஎம்எல்ஏ ராஜவர்மன், அதிமுக நிர்வாகி தங்கமுனியசாமி நரிக்குடி ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர் ஐ.ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.

அதன்படி ஆள் கடத்தல், மிரட்டிப்பணம் பறித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் ராஜவர்மன் உள்ளிட்டோர் மீது ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையை போலீசார், கடந்த 2024 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி ராஜவர்மன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்து, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி ராஜவர்மன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மனு, நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, மூன்று ஆண்டுகள் தாமதமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அக்டோபர் 8 ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என, ராஜவர்மன் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து ராஜவர்மனுக்கு விலக்களித்து உத்தரவிட்டார்.

மேலும், மனுவுக்கு நவம்பர் 4 ம் தேதிக்குள் பதிலளிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version