District judge appeared in pvj court

ஆவணங்களை முறையாக ஆய்வு செய்த பிறகே முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நிலத்தை அபகரிக்கும் நோக்கில், தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, தன்னையும், தனது மகனையும் தாக்கியதாக, எஸ்.செல்லம்பட்டு பஞ்சாயத்து தலைவர் அறிவழகி, அவரது கணவர் உள்ளிட்டோருக்கு எதிராக, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.லக்‌ஷ்மி பாலா என்பவர் சங்கராபுரம் போலீசில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி லக்‌ஷ்மி பாலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தாக்குதலில் காயமடைந்த புகார்தாரர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக அரசு வழக்கறிஞர் கூறியதை அடுத்து, குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு கள்ளக்குறிச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்த போது, கள்ளக்குறிச்சி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி இருசன் பூங்குழலி நேரில் ஆஜராகியிருந்தார்.

அவரிடம், காவல் துறையின் எழுத்துப்பூர்வமான மனுவை சரிபார்த்தீர்களா? மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் சம்மரி பெற்று ஆய்வு செய்தீர்களா? இதை சரிபார்க்காமல் எப்படி முன் ஜாமீன் வழங்கப்பட்டது? என சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி பி.வேல்முருகன், எதிர்காலத்தில் இதுபோல செயல்படக் கூடாது என எச்சரித்தார்.

அமர்வு நீதிமன்றத்தை தவறாக வழிநடத்திய காவல் துறைக்கும் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, சிகிச்சை பெற்ற மனுதாரரின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய அரசு மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com