Cj bench கொரோனா ஊரடங்கிற்கு பின் பள்ளிக்கு செல்ல மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைவாக இருப்பதாக தெரிவித்த உயர்நீதிமன்றம்,மாணவர்களின் கல்வி சம்பந்தமாக வேறு  பிரச்சினைகள் உள்ளதா என்பது குறித்து அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது…

கொரோனா ஊரடங்கிற்கு பின்
பள்ளிக்கு செல்ல மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைவாக இருப்பதாக தெரிவித்த உயர்நீதிமன்றம்,மாணவர்களின் கல்வி சம்பந்தமாக வேறு  பிரச்சினைகள் உள்ளதா என்பது குறித்து அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது…

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு ஆன் லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகிறது.

ஆனால், கிராமபுறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் கம்ப்யூட்டர், மொபைல் வசதிகளை பெற முடியாது என்பதால், அந்த மாணவர்களுக்காக ஆன் லைன் டிஜிட்டல் முறையில் கல்வி பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக பெண்கள் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தவில்லை என்பதை உறுதி செய்ய  மாவட்ட, தாலுகா, பஞ்சாயத்து அளவில் குழுக்களை நியமிக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, 18 மாதங்களுக்கு பின் மீண்டும் பள்ளி செல்ல மாணவர்கள் மத்தியில் ஆர்வக் குறைவு இருப்பதாகவும், வேலை இழப்பு காரணமாக சொந்த ஊர் திரும்பியோரின் குழந்தைகள் படித்து வந்த அரசு பள்ளிகளில் மாற்றுச் சான்று பெறுவதில் சிக்கல் இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

பின்னர், இந்த பிரச்னைகள் தொடர்பாக அரசின் ஆலோசனைகளை கேட்டு தெரிவிக்க தலைமை வழக்கறிஞர் அவகாசம் கோரியதை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அன்றைய தினம், மாணவர்களின் கல்வி சம்பந்தமாக இந்த இரு பிரச்னைகள் தான் உள்ளனவா? வேறு பிரச்னைகள் உள்ளனவா என்பதை தெரிவிக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.

You may also like...