Judge sakthivel /Cm vijai complaint Ab granted ponraj with condition for petner n r elango senior advt for police pp john sathyan
தவெக பெண் தொண்டர்களை இழிவாக பேசியதாக முதலமைச்சர் விஜய் அளித்த புகாரில் பதிவான வழக்குகளில் அரசியல் விமர்சகர் பொன்ராஜுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு பெண் தொண்டர்கள் ஆதரவளித்து அளித்த பேட்டிகள் குறித்து அரசியல் விமர்சகரும், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஆலோசகருமான பொன்ராஜ் சில கருத்துகளை தெரிவித்திருந்தார். அதில், தவெக பெண் தொண்டர்கள் குறித்து இழிவாக பேசியதாக தவெக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தவெக நிர்வாகிகள் டிஜிபி அலுவலகத்திலும், மாநகர காவல் ஆணையாரிடமும் புகார் அளித்திருந்தனர். கடலூர் மாவட்ட தவெக செயலாளரும், அமைச்சருமான பி. ராஜ்குமார், கடலூர் புது நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார்களின் அடிப்படையில், பொன்ராஜ்-க்கு எதிராக சென்னை சைபர் குற்றப்பிரிவும், கடலூர் புது நகர் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
இந்த வழக்குகளில் முன் ஜாமீன் கோரி பொன்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆர்.சக்திவேல், இரு வழக்குகளிலும் பொன்ராஜுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும், சென்னை சைபர் கிரைம் பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் வாரம் தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு சைபர் கிரைம் புலன் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
மேலும் பொறுப்பான அரசியல் விமர்சகர் என்ற முறையில் மனுதாரர் கருத்துக்களை தெரிவிக்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தனது கருத்துக்களால் ஏற்படும் தாக்கத்தையும், அதை மக்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்பதையும் புரிந்துகொண்டு கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.