மீரா மிதுனுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால் மனிதாபிமான அடிப்படையில் அவர் மீதான பிடிவாரண்டை வலியுறுத்த விரும்பவில்லை’
நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன்(வயது 34), பட்டியலினத்தவர் குறித்து அவறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதாக கடந்த 2021-ம் ஆண்டு அவர் மீது பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போலீசில் புகார் செய்தனர்.
இந்த புகார் குறித்து விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பின்னர், அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வரும் நிலையில் மீரா மிதுன் தொடர்ந்து ஆஜராகாததால் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து அவர் தலைமறைவானார். இந்தநிலையில் டெல்லி தெருக்களில் மீரா மிதுன் சுற்றி வருவது அவரது தாயாருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர், தனது மகளை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என தனியாக ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
கோர்ட்டு உத்தரவின் பேரில் மீரா மிதுன் டெல்லியில் மீட்கப்பட்டார். அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் சென்னை திரும்பிய மீராமிதுன், தனது தாயாருடன் சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் ஆஜரானார்.
அப்போது போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் எம்.சுதாகர், ‘மீரா மிதுனுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால் மனிதாபிமான அடிப்படையில் அவர் மீதான பிடிவாரண்டை வலியுறுத்த விரும்பவில்லை’ என தெரிவித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மீராமிதுனை அவரது தாயாருடன் அனுப்பி வைத்தார். பின்னர், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 6-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
=======