Armstrong murder case seek CBI /NSK J order

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி பொற்கோடி ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த வழக்கை தற்போது விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், 2024 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, ஆம்ஸ்ட்ராங்-கின் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும், வழக்கை சிபிஐ- க்கு மாற்றக் கோரி புதிய மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை காவல்துறை முறையாக விசாரணை நடத்தாததால் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது, இதே கோரிக்கையுடன் ஆம்ஸ்ட்ராங் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் தொடர்ந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பதை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து, கீனோஷ் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தீர்ப்பு வரும் வரை இந்த மனு விசாரிக்க முடியாது என தெரிவித்த நீதிபதி, கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்து வழக்கை செப்டம்பர் 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com