தவறான தகவல் கொடுத்த தாம்பரம் ரெயில் நிலைய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க ஐ.ஜி.,க்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. *காதல் கொடுமை* சென்னை ஐகோர்ட்டில்,
சென்னை, ஆக.3-
தவறான தகவல் கொடுத்த தாம்பரம் ரெயில் நிலைய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க ஐ.ஜி.,க்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
*காதல் கொடுமை*
சென்னை ஐகோர்ட்டில்,
நெய்வேலியைச் சேர்ந்த கலா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘என் மகன் கடந்த ஏப்ரல் 10-ந்தேதி தாம்பரத்தில் தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து தாம்பரம் ரெயில் நிலைய இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்தார். காதல் என்ற பெயரில் என் மகனை பல வழிகளில் பெண் ஒருவர் கொடுமை செய்ததால், அவன் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அவன் காதலித்த பெண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் அவன் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். ஆனால், தற்கொலை செய்யும்போது கடிதம் எழுதி வைக்காதததால், செல்போன் ஆதாரங்களை எடுத்துக் கொள்ள முடியாது என்று போலீசார் கூறினர். எனவே, எலட்ரானிக் வடிவலான ஆதாரங்களை திரட்டி வழக்கை விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன்.
*மீண்டும் விசாரணை *
இந்த மனு மீதான விசாரணையின்போது, வழக்கை விசாரித்து வருவதாகவும், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தரப்பில் கடந்த ஜூன் 12-ந்தேதி கூறப்பட்டது. இதை பதிவு செய்துக் கொண்ட ஐகோர்ட்டு, என் மனுவை முடித்து வைத்தது.
ஆனால், அதே ஜூன் 12-ந்தேதி என் மகன் தற்கொலை வழக்கிற்கு முகாந்திரம் இல்லை என்று கூறி, வழக்கை முடித்து வைத்து தாம்பரம் கோர்ட்டில் போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். எனவே, இந்த ஐகோர்ட்டுக்கு தவறான தகவலை இன்ஸ்பெக்டர் தந்துள்ளார். எனவே, அந்த அறிக்கையை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரிக் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
*நடவடிக்கை*
இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் எம்.விஜயகுமார் ஆஜராகி, ‘‘இந்த ஐகோர்ட்டுக்கு தவறான தகவலை கொடுத்து ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் மீது நடவிக்கை எடுக்கவேணடும்’’ என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று கூறிய அதே நாளில் வழக்கையே முடித்து வைத்து அறிக்கையை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்தது ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, வழக்கை முடித்து வைத்து இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த அறிக்கையை ரத்து செய்கிறேன். தவறான தகவல் கொடுத்து தாம்பரம் ரெயில் நிலையம் இன்ஸ்பெக்டர் மீது ஐ.ஜி., சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரர் மகன் தற்கொலை வழக்கை வேறு ஒரு இன்ஸ்பெக்டரை நியமித்து விசாரித்து, 3 மாதத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.
………..