நீதிபதி பி.என்.பிரகாஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, இரட்டை குழந்தைகளின் படிப்பு, வாழ்க்கை முறைகளை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாக கூறி, ஆறு வார காலத்திற்குள் குழந்தைகளை அமெரிக்கா அழைத்துச் சென்று தந்தையிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

பெற்றோரின் தேவையற்ற அகம்பாவ சண்டையில் குழந்தைகள் அடகு வைக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

மனைவியின் சட்ட விரோத கட்டுப்பாட்டில் உள்ள இரட்டை குழந்தைகளை மீட்டு தரக்கோரி அமெரிக்கா வாழ் இந்தியரான கிரண் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தானும், தன் மனைவியும் இந்தியாவில் பிறந்திருந்தாலும் தற்போது அமெரிக்க குடிமக்களாக உள்ளதாகவும், பிறப்பால் தமது இரு குழந்தைகளும் அமெரிக்க குடிமக்கள் என தெரிவித்துள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் குழந்தைகளை இந்தியாவிற்கு அழைத்து வந்த மனைவி, அவர்களை மீண்டும் அமெரிக்காவிற்கு அழைத்து வரவில்லை என்பதால் மீண்டும் அமெரிக்கா அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, இரட்டை குழந்தைகளின் படிப்பு, வாழ்க்கை முறைகளை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாக கூறி, ஆறு வார காலத்திற்குள் குழந்தைகளை அமெரிக்கா அழைத்துச் சென்று தந்தையிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், பெற்றோரிடையே ஏற்படும் தேவையற்ற அகம்பாவ சண்டையில் அடகு வைக்கப்படுவதால்,
குழந்தைகள் தங்களது குழந்தை பருவத்தை அனுபவிக்க முடியவில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இது போல ஒருநாளைக்கு இரண்டு, மூன்று வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவாக விசாரணைக்கு வருவதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

You may also like...

CALL ME
Exit mobile version