நீதிபதி சதீஷ்குமார், இந்த வழக்கில் போலீசார் போக்சோ சட்டப்படியும், குற்ற விசாரணை முறைச்சட்டப்படியும் செயல்படவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சிறுமிகள் சார்பாக அளிக்கபடும் புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனது 17 வயது மகள், 2021ல் கடத்தப்பட்டதாகவும், அவரை மீட்டுத் தரக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் அவரின் தந்தை ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சிறுமியை வேப்பூர் அருகே மீட்டுள்ளதாகவும், குழந்தைகள் நலக் குழு முன் ஆஜர்படுத்தியுள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தனது மகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யவில்லை எனவும், மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெறவில்லை எனவும், மருத்துவ பரிசோதனை நடத்தவில்லை எனவும் கூறி, சேதுராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், இந்த வழக்கில் போலீசார் போக்சோ சட்டப்படியும், குற்ற விசாரணை முறைச்சட்டப்படியும் செயல்படவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மேலும், பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக பெண் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெறவேண்டும் எனவும், மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம், விதிமுறைகள் வகுத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, இந்த விதிமுறைகளையும், போக்சோ சட்ட விதிகளையும் பின்பற்ற வேண்டும் என அனைத்து போலீசாருக்கும் சுற்றறிக்கை அனுப்ப தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டு, மனுவை முடித்து வைத்தார்.