தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர்கள், டப்பிங் கலைஞர்கள் சங்க கட்டிடம் விதிமீறி கட்டப்பட்டுள்ளதாக கூறி நோட்டீஸ் அனுப்பியதில் எந்த அரசியல் உள்நோக்கமும்

தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர்கள், டப்பிங் கலைஞர்கள் சங்க கட்டிடம் விதிமீறி கட்டப்பட்டுள்ளதாக கூறி நோட்டீஸ் அனுப்பியதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் ராதாரவி தாக்கல் செய்த மனுவில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள சங்க கட்டிடத்தை ஆய்வு செய்ததாகவும், அதில் கட்டிட ஒப்புதலை மீறி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறி, கட்டிடத்தின் திட்ட ஒப்புதலை வழங்கும்படி சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நோட்டீசின் அடிப்படையில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2010ம் ஆண்டு ஒப்புதல் பெறப்பட்ட கட்டிடத்தின் மீது 12 ஆண்டுகளுக்கு பின் அரசியல் உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

எந்த விதிமீறலும் இல்லாத நிலையில் அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன், செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு சங்கத்தின் சார்பில் பதிலளிக்கப்பட்டு விட்டதாகவும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நோட்டீஸ் அனுப்பியதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

You may also like...