சத்தியமங்கலம் புலிகள் சரணாலய சாலையில் 12 சக்கரங்களுக்கும், 16.2 டன்னுக்கும் மேல் உள்ள கனரக வாகனங்களுக்கு எப்போதும் அனுமதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

 

சத்தியமங்கலம்
புலிகள் சரணாலய சாலையில் 12 சக்கரங்களுக்கும், 16.2 டன்னுக்கும் மேல் உள்ள கனரக வாகனங்களுக்கு எப்போதும் அனுமதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் மாலை 6 மணிக்கு மேல் காலை 6 மணி வரை பாஸ் வாங்கிய உள்ளூர் வாகனங்களை தவிர வேறு எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை என்றும் உத்தரவிட்டுள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் கோவை – பெங்களூரு சாலையில் இரவு நேரங்களில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கக்கோரி யானைகள் நல ஆர்வலரான எஸ்.பி.சொக்கலிங்கம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் 2019ஆம் ஆண்டு உத்தரவை முறையாக அமல்படுத்தும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து மக்கள் போராடடத்தில் ஈடுபட்டனர்.

தடை உத்தரவால் பொதுமக்கள், பள்ளி கல்லூரி செல்பவர்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பவானிசாகர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. – பி.எல்.சுந்தரமும்,
ஈரோட்டை சேர்ந்த கண்ணையன் என்பவரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரிக்கப்பட்டன.

அப்போது தமிழக அரசு தரப்பில் பால் மற்றும் மருத்துவ அவசர வாகனங்கள், பொது போக்குவரத்து வாகனங்கள் தவிர, பிற வாகனங்களை இயக்க தடை விதிக்கலாம் எனவும், உள்ளூர் மலை கிராம மக்கள் எந்த நேரக் கட்டுப்பாடும் இல்லாமல், உரிய ஆதாரங்களை சரிபார்த்து சாலையில் பயணிக்க அனுமதிக்கலாம், அழுகும் பொருட்களான காய், பழங்கள், பூக்கள், பால் உள்ளிட்ட பொருட்கள் இரவு நேரங்களில் கொண்டு செல்ல எந்த தடையும் இல்லாமல் அனுமதிக்கலாம் எனத் வாதிடப்பட்டது.

இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், 12 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கும், 16.2 டன்னுக்கும் மேல் எடையுள்ள வாகனங்களுக்கும் எப்போதும் அனுமதி இல்லை என உத்தரவிட்டனர். அதற்கு கீழ் உள்ள வாகனங்கள் மற்றும் அனைத்து வாகனங்கள் காலை 6 மணிக்கு மேலிருந்து மாலை 6 மணி வரை என பகல் நேரத்தில் மட்டுமே அனுமதிப்பட வேண்டுமெனவும், இரவில் அனுமதி இல்லை என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அந்த சாலையில் அனுமதிக்கப்படும் வாகனங்கள் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ள நீதிபதிகள். தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளின் பொது போக்குவரத்து வாகனங்களுக்கும், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கும் காலை 6 மணி முதல் இரவு 9 வரை மட்டுமே அனுமதிக்க வேண்டுமெனவும் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

பால் மற்றும் மருத்துவ பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இன்றி அனுமதிக்கப்படுவதாகவும், 27 கி.மீ. தூரமுள்ள சாலையில், ஒவ்வொரு 5 கிலோமீட்டர் தூரத்திற்கும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் எனவும், மின் இணைப்பு இல்லாத இடங்களில் சூரிய ஒளி மூலம் இயங்கும் சிசிடிவி பொருத்த வேண்டும் என தெரிவித்துள்ள நீதிபதிகள், அவற்றின் பதிவுகளை 45 நாட்களுக்கு பாதுகாக்கும் வகையில் அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களிடம் கட்டணம் வசூலித்து, அதை சாலை மற்றும் சிசிடிவி பராமரிப்பதற்கு பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ள நீதிபதிகள், 27 கிமீ சாலையில் உள்ள கிராம மக்களின் வாகனங்களை புகைப்படத்துடன் கூடிய பாஸ் வழங்கி வாகனங்களை அனுமதிக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

வனவிலங்குகள் சாலையை எளிதாக கடக்கும் வகையில் மேல்மட்ட அல்லது கீழ்மட்ட பாலங்களை அமைக்க வேண்டும் எனவும், வனவிலங்குகளுக்கு ஒரு போதும் சிரமங்கள் இல்லாத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் பழங்குடியினர் உரிய அனுமதியுடன் சென்று வரலாம் என கூறியுள்ள நீதிபதிகள், மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களும் உரிய அனுமதியுடன் செல்லலாம் என உத்தரவிட்டு, வழக்குகளை முடித்துவைத்தனர்.

You may also like...