உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், தற்போதைக்கு தேர்தலை நடத்தப்போவதில்லை என்றும் புதுச்சேரி அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், தற்போதைக்கு தேர்தலை நடத்தப்போவதில்லை என்றும் புதுச்சேரி அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சி தேர்தலில் பட்டியல் இனத்தவருக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கும் வார்டுகள் ஒதுக்கீட்டில் குளறுபடிகள் உள்ளதாக கூறி முத்தியால்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகேஷ் குமார் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, உள்ளாட்சி தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக சட்டத்தை மீற முடியாது என கருத்து தெரிவித்து புதுச்சேரி அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், வார்டு ஒதுக்கீடு தொடர்பாக மறு ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரியில் இப்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்போவது இல்லை என்பதால், அக்டோபர் 21 முதல் நடத்த உள்ள தேர்தலை தள்ளிவைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதால், இந்த வழக்கை வழக்கை அக்டோபர் 7 தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் முதல்வர் முடிவெடுக்க உள்ளாதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

வார்டுகள் ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளுக்கு தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்திய தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, அதுவரை வேட்பு மனுக்கள் பெறுவதை தள்ளிவைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். புதுச்சேரி அரசின் முடிவை தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கை நாளை (அக்டோபர் 5) மாலை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

You may also like...