உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியது திருப்தி அளித்தாலும், வழக்கறிஞர் தொழிலை முறைப்படுத்த முடியாதது, டாஸ்மாக் கடைகளை மூட முடியாததும் மனநிறைவை அளிக்கவில்லை என நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியது திருப்தி அளித்தாலும், வழக்கறிஞர் தொழிலை முறைப்படுத்த முடியாதது, டாஸ்மாக் கடைகளை மூட முடியாததும் மனநிறைவை அளிக்கவில்லை என நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி கிருபாகரன், ஆகஸ்ட் 21ல் பணி ஓய்வு பெறுவதை ஒட்டி, அவருக்கு உயர் நீதிமன்றம் சார்பில் வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், பிரிவு உபச்சார உரை நிகழ்த்திய அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மக்கள் நீதிபதி என அழைக்கப்படும் நீதிபதி கிருபாகரன் ஓய்வு பெறுவது மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

பதிலுரை ஆற்றிய நீதிபதி கிருபாகரன், தாய் – தந்தை, ஆசான்களை நினைவு கூர்ந்த போது கண்கலங்கினார். ஒரு போதும் தன்னை நீதிபதியாக நினைத்து கொண்டதில்லை எனவும், சாதாரண நபராகவே இருந்ததாகவும் தெரிவித்தார்.

125 வயது உயர் நீதிமன்ற கட்டிடத்தில் நீதிபதியாக பணியாற்றியதில் பெருமை கொள்வதாக குறிப்பிட்ட அவர், வழக்கறிஞர் தொழிலின் புனிதத்தை மீட்டெடுக்க வேண்டும் என இளம் வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தினார்.

வழக்குகளில் மனசாட்சி படி தீர்ப்பளித்ததாக கூறிய அவர், நீதிபதியாக பணி ஓய்வு பெறுவது திருப்தியாக இருந்தாலும், வழக்கறிஞர் தொழிலை முறைப்படுத்த முடியாதது, டாஸ்மாக் கடைகளை மூட முடியாமல் போனது நிறைவை அளிக்கவில்லை என வேதனை தெரிவித்தார்.

மதுவிலக்கு கொண்டு வர அரசு முயற்சிக்கு வேண்டும் எனவும் உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

You may also like...