இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்யக்கோரி அந்நாட்டு கைதி தாக்கல் செய்த மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்யக்கோரி அந்நாட்டு கைதி தாக்கல் செய்த மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த சுஜாந்தன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், குற்ற வழக்கில் கடந்த 2020ம் ஆண்டு கைது செய்யப்பட்ட தாம் புழல் சிறையில் அடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். புழல் சிறையில் தங்களுக்கு சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், அந்த உணவு உடலுக்கு ஒத்துழைக்கவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது கைது குறித்து இலங்கை தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்ய மத்திய,மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.நதியா, இலங்கை நாட்டை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டது குறித்து அந்நாட்டு தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்காதது வியன்னா ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று வாதிட்டார்.
சிறை நிர்வாகம் சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக், இலங்கை தூதரத்திற்கு மத்திய அரசு தான் தகவல் தெரிவிக்க வேண்டுமென தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள், நமது நாட்டு மீனவர்கள் இலங்கை சிறையில் இருக்கும் போது தூதரக அதிகாரிகளை சந்திப்பதற்கு அனுமதி கேட்பார்கள். அதேபோல, அந்நாட்டை சேர்ந்த நபருக்கு தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்து தர வேண்டுமென தெரிவித்தனர்.
கைது குறித்து இலங்கை தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? என்பது குறித்து சிறை நிர்வாகத்திடம் கேட்டு தகவல் தெரிவிக்குமாறு கூறிய நீதிபதிகள் மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.