அம்மனுக்கு கூழ் வார்க்கும் விழா சாதி பேதமின்றி நடத்த வேண்டும்

சென்னை,ஆக.8-
சென்னை ஐகோர்ட்டில், வேலூர் மாவட்டம் தெள்ளூர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வி.சுப்பிரமணி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘எங்கள் ஊரில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் கூழ் வார்க்கும் திருவிழா நடத்தப்படும். இந்த ஆண்டு திருவிழா நடத்தப்படவுள்ள நிலையில் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மற்றும் டீக்காராமன் ஆகியோர் பிரச்சினை செய்து வருகின்றனர். எனவே கூழ் வார்க்கும் விழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, ‘‘ஆடி மாதத்தில் கூழ் வார்க்கும் திருவிழா நடப்பது வழக்கமானது தானே, எதற்காக போலீஸ் பாதுகாப்பு கேட்கப்படுகிறது?’’ என்று கேள்வி எழுப்பினார். அப்போது எதிர்மனுதாரர் டீக்காராமன் தரப்பில் ஆஜராகியிருந்த வக்கீல் த.முத்துகிருஷ்ணன், ‘‘இந்த திருவிழாவின் போது கோவிலின் தர்மகர்த்தா, மேட்டுக்குடி உள்ளிட்ட பொறுப்புகளை வகிப்பவர்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படுகிறது’’ என்றார். அதற்கு நீதிபதி, ‘‘மேட்டுக்குடி என்பது ஊர் பெயரா?’’ என்று கேள்வி எழுப்பினார். அது கோவில் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு கொடுக்கப்படும் பட்டம் என்று பதிலளிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, ‘‘இந்த வழக்கில் இந்துசமய அறநிலையத்துறையின் உதவி ஆணையரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கிறேன். அவரது தலைமையில் அம்மனுக்கு கூழ் வார்க்கும் விழா சாதி பேதமின்றி நடத்த வேண்டும். இந்த விழாவுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவனின் வாக்குப்படி, இந்த நாட்டில் மேட்டுக்குடி, பள்ளக்குடி என்று யாரும் இல்லை. இந்த வழக்கை முடித்து வைக்கிறேன்’’ என்று உத்தரவிட்டார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com