தர்மபுரியில் கோவில்களுக்கு சொந்தமான சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற 12 வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரியில் கோவில்களுக்கு சொந்தமான சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற 12 வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திருத்தொண்டர் அறக்கட்டளையின் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் மற்றும்
புலிக்கரை கிராமங்களில் கோடலம்மன் கோவில், செல்லியம்மன் கோவில், ஈஸ்வரன் கோவில், பெருமாள்சாமி கோவில், திருமலைத்தேவர் கோவில் உள்ளிட்ட கோவில்களின் சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்படாமல், தனியார் வசம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த கோவில் நிலங்களில் சட்டவிரோதமாக கட்டுமானங்கள், ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்டவிரோதமாக வாடகை வசூல் என்று பல சம்பவங்கள் நடப்பதை இந்து அறநிலைய துறை அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புகார் அளித்தும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், தர்மபுரியில் கோவில்களுக்கு சொந்தமான சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தில் கடைகள் உள்ளிட்ட பல வணிக நிறுவனங்கள் வாடகைத் தொகை கொடுக்காமல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளன என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட அறநிலைய துறை தரப்பு, ஆக்கிரமிப்பு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தர்மபுரியில் கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரத்துக்குள் அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.