அமைச்சரவையின் பரிந்துரைகளை கவர்னர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது* *சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு பரபரப்பு தீர்ப்பு*
*அமைச்சரவையின் பரிந்துரைகளை கவர்னர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது*
*சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு பரபரப்பு தீர்ப்பு*
பல ஆண்டுகளாக சிறையிலிருக்கும் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் நிராகரித்ததின் அடிப்படையில் போடப்பட்ட உத்தரவுகளை எதிர்த்து பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் நீதிபதிகள் எம் எஸ்,ரமேஷ் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பென்ச் முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணக்கு வந்தது. அப்போது, இரண்டு நீதிபதிகள் அடங்கிய இரு வேறு தீர்ப்புகள் மாறுபட்ட உத்தரவுகளை பிறப்பித்திருப்பதால், அதனை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க தலைமை நீதிபதிக்கு கீழ்கண்ட கேள்விகளை எழுப்பி, பரிந்துரை செய்திருந்தனர்.
1. தண்டனை குறைப்பு மற்றும் முன் கூட்டியே விடுதலை செய்யும் அரசின் அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுபட்டவரா?
2. மேற்கண்ட வழக்குகளில் எந்தெந்தெ சூழல்களில் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுபடாமல் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியும்?
இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, ஜி.கே.இளந்திரையன் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், மனோகரன் , சைஃபுல்லா உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.
அரசு தரப்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா ஆஜராகி ”அரசியலமைப்பு ஷரத்துகளின்படி ஆளுநர் அமைச்சரவையின் அறிவுரையின்படி மட்டுமே செயல்பட முடியும் என தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற ஏழு நீதிபதிகள் கொண்ட ஷம் ஷேர் வழக்கின் தீர்ப்பின் படி கவர்னர் நிர்வாக செயல்பாடுகளில் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது, அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் பரிந்துரையின் படியே செயல்பட முடியும் என உறுதிபடுத்தியுள்ளது.
அதே போன்று உச்சநீதிமன்ற ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாஸன அமர்வான மரு ராம் வழக்கில் ஆளுநர் பெயரளவிலான தலைவர் ( Symbolic Head) மட்டுமே. முன்கூட்டியே விடுதலை செய்யும் அமைச்சரவையின் முடிவுகளில் ஆளுநர் ஒப்புதலின்றி கூட அரசு உத்தரவு போட முடியும் என கூறியுள்ளது. இவை அனைத்தையும் பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் பின்பற்றியுள்ளது. எனவே ஆளுநர் முன் கூட்டியே விடுதலை செய்யும் அமைச்சரவையின் முடிவை நிராகரிக்க அதிகாரம் இல்லை என வாதிட்டார்.
மனுதார்ர் வழக்கறிஞர்களும் இதே கருத்தை முன்வைத்தனர். அனைவரது வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
*இன்று (2.4.2026) இந்த வழக்கின் தீர்ப்பினை நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, ஜி.கே.இளந்திரையன் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய மூன்று நீதிபதிகள் ”தண்டனை குறைப்பு மற்றும் முன் கூட்டியே விடுதலை செய்யும் அரசின் அமைச்சரவை முடிவை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுபட்டவர் என தீர்ப்பளித்தனர்.*