Mhc orders oct 6

[10/6, 12:27] Sekarreporter1: மும்பை வங்கிக் கணக்கில் டிபாசிட் செய்யப்பட்டிருந்த 40 கோடி ரூபாயை விடுதலைப்புலிகள் அமைப்புக்காக, மோசடி செய்து எடுக்க முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்டப்பூர்வ ஜாமீன் வழங்க மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மும்பை கோட்டை கிளையில், சேமிப்பு கணக்கில் ஹமிதா ஏ லால்ஜி என்பவர், 40 கோடி ரூபாய் பணத்தை டிபாசிட் செய்து வைத்திருந்தார். அவர் இறந்து விட்டதால், அந்த வங்கிக் கணக்கு கையாளப்படாமல் இருந்து வந்தது.

இதை தெரிந்து கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த, ஐரோப்பாவில் வசிக்கும் உமா காந்தன் என்பவர், அத்தொகையை தங்கள் இயக்கத்துக்காக கையாடல் செய்ய முடிவு செய்துள்ளார்.

இந்த பணத்தை கைப்பற்றுவதற்காக இலங்கை தமிழரான லட்சுமணன் மேரி ஃப்ரான்சிஸ்கா என்பவரை இந்தியா அனுப்பி வைத்தனர். இந்தியா வந்த அவர், பான் கார்டு, ஆதார் அட்டை பாஸ்போர்ட் போன்றவற்றைப் பெற்றுள்ளார்.

அவருடன் கென்னிஸ்டன் ஃபெர்னாடோ, பாஸ்கரன், ஜான்சன் சாமுவேல், தர்மேந்திரன், மோகன் ஆகியோர் இணைந்து, ஹமிதாவின் பொது அதிகாரம் பெற்றதாக போலி ஆவணங்களை தயாரித்து, 40 கோடி ரூபாயை எடுக்க முயற்சித்தனர்.

ஆனால், போலி பாஸ்போர்ட் வழக்கில் லட்சுமணன் மேரி ஃப்ரான்சிஸ்கா உள்ளிட்ட ஆறு பேரும் சிக்கினர். பின், அவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், அரசுத்தரப்பு அறிக்கையை ஏற்று, மேலும் 90 நாட்கள் கால அவகாசம் வழங்கி, செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், நீதிமன்ற காவலை நீட்டித்து செங்கல்பட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும், சட்டப்பூர்வ ஜாமீன் வழங்க மறுத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்து, தங்களுக்கு சட்டப்பூர்வ ஜாமீன் வழங்கக் கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கென்னிஸ்டன் ஃபெர்னாடோ, பாஸ்கரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு, சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. அமைப்பினர், கடந்த மார்ச் 29ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், சட்டப்பூர்வ ஜாமீன் வழங்க மறுத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கடந்த ஏப்ரல் மாதம் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
[10/6, 13:27] Sekarreporter1: மோசடி, போலி, பத்திரப்பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட பதிவாளர்களுக்கு வழங்கி கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மோசடி, போலி, பத்திரப்பதிவுகளை தடுக்கும் வகையில், கடந்தாண்டு சட்டப்பேரவையில் மத்திய பதிவுச்
சட்டத்தில் தமிழக அளவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம், போலி பதிவுகள் குறித்து மாவட்ட பதிவாளரே ஆய்வு செய்து, அவற்றை ரத்து செய்ய முடியும்.
பதிவுச்சட்ட விதிகளில் 22ஏ மற்றும் பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்று
பதிவாளர் கருதினால், அந்தப் பதிவை பதிவாளர் தானாக முன்வந்தோ, புகார் மீதோ, எழுதிக் கொடுத்தவருக்கும், ஆவணத்தின் அனைத்து தரப்பினருக்கும் மற்றும் தொடர்ச்சியான ஆவணங்கள் இருந்தால் அவற்றின் தரப்பினருக்கும், பதிவு ரத்தால்
பாதிக்கப்படுபவர்களுக்கும், இந்த பத்திரப்பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று கேட்டு அறிவிப்பு வழங்க வேண்டும். அதற்காக பதில் பெறப்பட்டால், அதைக் கருத்தில்கொண்டு ஆவணப்பதிவை பதிவாளர் ரத்து செய்யலாம். பதிவுத்துறை தலைவருக்கும் இந்த அதிகாரம் உண்டு.
பதிவாளரின் உத்தரவால் பாதிக்கப்பட்டவர்கள், பத்திரப்பதிவு ரத்துசெய்யப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்
களுக்குள் பதிவுத்துறை தலைவரிடம் மேல்முறையீடு செய்யலாம். இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆரோக்கியதாஸ் என்ற வழக்கறிஞர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் மத்திய சட்டத்திற்கு முரணாக இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் புதிய சட்ட திருத்தம் மத்திய சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பத்திரப்பதிவு ரத்து தொடர்பாக எந்த ஒரு காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை என்றும் இது ஒரு முரண்பாடான சட்ட திருத்தம் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.
மோசடி பத்திரம்தான் என்பதை முடிவு செய்ய எந்த விதமான விதிமுறைகள்,
நடைமுறைகள் வகுக்கப்படவில்லை,இந்திய சாட்சியங்கள் சட்டத்தின் கீழ் உரிய சாட்சியங்கள் வேண்டும் இதற்கு சரியான அமைப்பு உரிமையியல் நீதிமன்றங்கள்தான் என குறிப்பிட்டுள்ளார்.
இதுபோல பத்திரப்பதிவு ரத்துகளை உரிமையியல் நீதிமன்றத்தில் தான் செய்ய முடியும் என்றும் மாவட்ட பதிவாளர்களுக்கே அதிகப்படியான அதிகாரம் இதன் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் எனவே இந்த சட்ட திருத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும், சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், என்.மாலா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கு குறித்து நான்கு வாரத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு ஒத்திவைத்துள்ளனர்.
[10/6, 14:56] Sekarreporter1: ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கன்சல்டன்சி நிறுவனத்தின் உரிமையாளருக்கு மகிளா நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

தனது நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு பிரிவில் வேலை பார்த்து வந்த பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்ததாக, தனியார் கன்சல்டன்சி நிறுவன உரிமையாளர்
ஆண்டனி ஜான் மில்டன் என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்த து. மயக்க மருந்து அளித்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் நிர்வாண நிலையில் இருந்த போது புகைப்படங்களை எடுத்து அதை காண்பித்து மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரத்தை ஈடுபட்டதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்றம் கடந்த 2014 ம் ஆண்டு நிறுவன உரிமையாளருக்கு பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்,ஆண்டனி ஜான் மில்டன் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி
மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டு,பாலியல் பலாத்காரம், மிரட்டல் மற்றும் துன்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் தண்டனையை ரத்து செய்தார். அபராதத் தொகையைத் திரும்பப் பெறவும் உத்தரவிட்டார்.நிறுவன உரிமையாளர் சார பில் சம்பவத்தன்று சிசிடிவி கேமரா காட்சிகள் சமர்பிக்கப்பட்டதன் அடிப்படையிலும், பலாத்காரம் நடந்ததாகக் கூறப்படும் நாளில் அலுவலகத்தில் ஊழியர் மகிழ்ச்சியுடன் நடமாடுவதையும்,
மேலும், புகார்தாரரின் நிர்வாண புகைப்படங்கள் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிய அவரது மொபைல் போனை போலீசார் கைப்பற்றவில்லை என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் புகார்தாரர் அளித்த சாட்சியங்களில் முரண்பாடுகள் இருப்பதாகவும், மருத்துவ சான்றுகளுடன் அது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் கூறினார்.
புகார்தாரர் முற்றிலும் நம்பகமான சாட்சி அல்ல என்றும் சரியான உறுதிப்படுத்தல் இல்லாமல் அவரது சாட்சியத்தை ஏற்றுக்கொள்ள முடியாது,” என்று நீதிபதி கூறியுள்ளார்.முதலில் காவல்துறையை அணுகுவதற்கு முன்பு அவரும் அவரது தாயும் நிறுவனத்தின் உரிமையாளரை சந்தித்ததை சுட்டிக்காட்டினார்.
வழக்கு விசாரணையில் சந்தேகத்தை உருவாக்குகிறது,
வழக்கு நம்பகத்தன்மையற்றது என்றும், தண்டனை மற்றும் தண்டனையை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் தீர்ப்பில் கூறியுள்ளார் .
[10/6, 16:48] Sekarreporter1: காவல் துறை அதிகாரிகள் நான்கு பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை டி.பி.சத்திரம் காவல் நிலைய முன்னாள் ஆய்வாளர் தயால் மற்றும் உதவி ஆய்வாளர் கார்த்திக்குடன் இணைந்து கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு வைத்து கட்ட பஞ்சாயத்து செய்து வருவதாகவும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சுகுமார் என்பவர், உயரதிகாரிகளுக்கு புகார் அனுப்பினார்.

புகாரை விசாரித்த கீழ்ப்பாக்கம் சரக முன்னாள் உதவி ஆணையர் ஹரி குமார், வழக்கறிஞர் சுகுமார் தான் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாகவும் , சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதாகவும் அறிக்கை அளித்தார்.

அத்துடன், வழக்கறிஞர் சுகுமாரை சரித்திர பதிவேடு குற்றவாளியாக காவல் துறையினர் அறிவித்தனர்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தமது பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், காவல் துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து காவல் துறை அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, தனி நபர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என காவல்துறையினர் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ. ராஜ்திலக் வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல் துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யும்படி முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
[10/6, 17:27] Sekarreporter1: அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான ரெண்டகம் படத்தை இந்தியாவில் ஓடிடி-யில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஃபெலினி இயக்கத்தில் தமிழில் ரெண்டகம் என்ற பெயரிலும், மலையாளத்தில் ஒட்டு என்ற பெயரிலும் இயக்கக்கப்பட்ட திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்நிலையில் ரெண்டகம் திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாக இருந்த நிலையில் அதற்கு தடைக்கோரி சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த கிஷோர் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், இந்த படத்தின் கதையை ஜாவா என்ற பெயரில் இயக்குவதற்காக நடிகர் அரவிந்த் சாமியிடம் கதை சொல்லியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த கதையை பதிவு செய்து அதற்கான காப்புரிமை பெற்ற நிலையில் இதை கதை களத்துடன் தமிழில் ரெண்டகன் என்ற படம் வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்று ஓடிடியில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், ரெண்டகன் படத்தை ஓடிடி தளத்தில் இந்தியாவில் வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட ஐந்து பேர் தலா பத்து லட்சம் ரூபாயை வரும் 10ம் தேதிக்குள் டெபாசிட் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை அன்றைக்கு ஒத்திவைத்தார்

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version