வாக்குச்சீட்டுகளை பறித்துச் சென்றவரை ஏன் கைது செய்யவில்லை என நீதிபதிகள் கேள்வி

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி மறைமுக தேர்தலின்போது வாக்குச்சீட்டை எடுத்து சென்றவரை தேர்தல் அதிகாரியும், காவல்துறையும் தடுக்காத விவகாரத்தில் என்ன முடிவெடுக்க போகிறது என நாளை விளக்கமளிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆடுதுறை பேரூராட்சியின் மறைமுக தேர்தலின்போது, திமுக கவுன்சிலர் கடத்தப்பட்டதாக கூட்டணி கட்சியினர் ரகளையில் ஈடுபட்டதால், தேர்தல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன், தாமதமின்றி மறைமுக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி தலைவர் பதவிக்கு போட்டியிட இருந்த ம.க.ஸ்டாலின் உள்ளிட்ட எட்டு உறுப்பினர்கள் சார்பில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அவர்களின் மனுவில், மறைமுக தேர்தல் நாளன்று மூன்று திமுக உறுப்பினர்கள் வராததால், கூட்டணி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் வேட்புமனுக்களை பறித்து, கிழித்தெறிந்து ரகளையில் ஈடுபட்டதால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். பொய் வழக்கில் தங்களை சிறையில் அடைத்துவிட்டு மறைமுக தேர்தல் நடத்த இருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, மறைமுக தேர்தல் நாளன்று எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வீடியோ பதிவுகளை மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்தது.

இந்த வீடியோ காட்சிகளை பார்வையிட்ட நீதிபதிகள், வாக்குச் சீட்டை ஒருவர் பறித்து செல்கிறார். அவரை தடுக்காமல் காவல் துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறனர். இதை ஏற்றுக் கொள்ள முடியாது என அதிருப்தி தெரிவித்தனர்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்திய மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பாராட்டுக்குரியது என்ற போதும் இது போன்ற நிகழ்வுகளை தடுத்திருக்க வேண்டும் என்றனர்.

மேலும், வாக்குச்சீட்டுகளை பறித்துச் சென்றவரை ஏன் கைது செய்யவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, சம்பந்தபட்ட நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

பின்னர் நீதிபதிகள், இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுக்க உள்ளது என்பது குறித்து நாளை விளக்கம் அளிக்க, மாநில தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version