மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலையின் அலகில் மலர் தான் இருந்தது
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலையின் அலகில் மலர் தான் இருந்தது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் 2004ம் ஆண்டில் குடமுழுக்கு விழா நடைபெற்ற போது புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை மாயமானதாக புகார் கூறப்பட்டது.
இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 2018ம் ஆண்டு பதிவு செய்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக் கோரியும், அறநிலையத் துறை அதிகாரிகளின் தொடர்பு குறித்து துறை ரீதியாக நடத்தப்படும் உண்மை கண்டறியும் விசாரணையை விரைந்து முடிக்கக் கோரியும் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மயில் அலகில் மலர் தான் இருந்தது என்பது தெரியவந்ததாகவும், சிலை மாயமானதற்கு காரணமான அதிகாரிகளை அடையாளம் காண உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இக்குழு விசாரணையை முடிக்க ஆறு வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, மயில் சிலை மாயமானது குறித்து காவல் துறை பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணை முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும், தொல்லியல் துறையிடம் இருந்து, சிலையின் தொன்மை குறித்த சான்றிதழ் பெற வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தடை விதித்துள்ளதாகவும், சிலையை கண்டுபிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், இந்த வழக்கில் தொடர்ந்து தாமதம் ஏற்படுத்தி வருவதாக குறை கூறினார்.
இதையடுத்து, உண்மை கண்டறியும் குழு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், காவல் துறை விசாரணையை முடித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், மயிலின் அலகில் மலர் தான் இருந்தது என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
இடைப்பட்ட காலத்தில், அலகில் மலருடன் கூடிய மயில் சிலையை தயாரிக்கும் பணியை துவங்கும்படி, அறநிலையத் துறைக்கு நீதிபதிகள் ஆலோசனை தெரிவித்தனர்.