போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகல், விசாரணை அதிகாரிகள், அரசு வக்கீல்களுக்கு போக்சோ சட்டம் குறித்த பயிற்சி தரப்பட வேண்டும் என்று இந்த நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்துகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரை விடுதலை செய்த மகளிர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
திருவள்ளூரை சேர்ந்தவர் விக்டர் ஜான். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் பக்கத்து வீட்டு 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த விஷயத்தை வேறு ஒருவரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார். தொடர்ந்து பலாத்காரம் செய்ததில் அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இந்த விபரம் தெரிந்தவுடன் சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க தனியார் மருத்துவமனை டாக்டரிடம் கூட்டி சென்றுள்ளார். ஆனால், குழந்தை வளர்ச்சி அடைந்துவிட்டதால் கர்ப்பத்தை கலைக்க முடியாது என்று டாக்டர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சிறுமியை தனக்கு வேண்டப்பட்டவர்கள் வீட்டில் வைத்து கவனித்துள்ளார். இதையடுத்து, அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் மூலம் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகளை மீட்ட பெற்றோர் திருவள்ளூர் மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விக்டர் ஜான் மீது பாலியல் பலாத்காரம், மிரட்டல் மற்றும் போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
அவருக்கு உதவியதாக செல்வம், கிருபாகரன், ராஜேந்திரன், பியூலா உள்ளிட்டோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த வழக்கு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சம்பவ காலத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி 18 வயதுக்கு கீழ் இருந்தார் என்பதை போலீஸ் தரப்பு நிரூபிக்க தவறியதால் விக்டர் ஜான் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மகளிர் போலீஸ் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசு வக்கீல் எஸ்.சுகேந்திரன் ஆஜராகி, சிறுமி பிறந்தது 1998 பிப்ரவரியில். அவர் 2014லில் இருந்து பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அந்த நேரத்தில் சிறுமிக்கு 16 வயதுதான். சிறுமியின் வயது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் கொடுத்த சான்றிதழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: சிறுமியின் பிறந்த தேதி தொடர்பான சான்றிதழில் அவர் 1998ல் பிறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சிறுமியின் சம்மதத்துடன்தான் உறவு கொண்டதாக விக்டர் ஜான் தரப்பில் வாதிட்டதை ஏற்க முடியாது. சம்பவம் நடந்தபோது சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை. அவரை திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியுள்ளது போதிய ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே, விக்டர் ஜானை விடுதலை செய்த திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. விக்டர் ஜானுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை சிறுமியின் குழந்தையின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். அந்த குழந்தை உரிய வயதை எட்டியவுடன் வட்டியுடன் அந்த தொகை வழங்கப்பட வேண்டும். விக்டர் ஜானுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்த மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகல், விசாரணை அதிகாரிகள், அரசு வக்கீல்களுக்கு போக்சோ சட்டம் குறித்த பயிற்சி தரப்பட வேண்டும் என்று இந்த நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்துகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version