தமிழகத்தில் ‘போக்சோ’ வழக்குகளை விரைவாக விசாரிக்க, புதிதாக ஆறு சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதற்கு, அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக
தமிழகத்தில் ‘போக்சோ’ வழக்குகளை விரைவாக விசாரிக்க, புதிதாக ஆறு சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதற்கு, அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை வழக்குகளை விரைவாக விசாரிக்க உத்தரவிட கோரி, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், மாநிலத்தில், போக்சோ சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்கள் எண்ணிக்கை குறித்த விபரங்களை, நீதிமன்ற பதிவுத்துறை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில் நான்கு போக்சோ சிறப்பு நீதிமன்றங்களில், நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும். நடப்பாண்டு ஜூன் 25ம் தேதி நிலவரப்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து போக்சோ சிறப்பு நீதிமன்றங்களில், மொத்தம் 18,675 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில் சென்னையில் உள்ள இரண்டு நீதிமன்றங்களில் மட்டும் 1,204 வழக்குகளும், கோயம்புத்துாரில் 1,023 வழக்குகளும் நிலுவையில் இருப்பதாகவும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், 279 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தன.
தென்காசி, ஈரோடு, திருப்பூர், திருச்சி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் தலா ஒரு நீதிமன்றமும், சென்னையில் கூடுதலாக ஒரு நீதிமன்றமும் என, மொத்தம் தமிழகத்தில் மொத்தம் ஆறு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரியதை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.