கடவுளே ஆக்கிரமித்திருந்தாலும் அதை அகற்ற உத்தரவிடப்படும் எனஐகோர்ட் தெரிவித்துள்ளது.

பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோவில்களை கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை என குறிப்பிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், கடவுளே ஆக்கிரமித்திருந்தாலும் அதை அகற்ற உத்தரவிடப்படும் என தெரிவித்துள்ளது.

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பலபட்டரை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சார்பில் பொது சாலையை ஆக்கிரமித்து கட்டுமானம் மேற்கொண்டுள்ளதாகவும், அந்த கட்டுமானம் தங்கள் சொத்துக்கு செல்லும் வழியை தடுக்கும் வகையில் உள்ளதாகவும் கூறி பாப்பாயி என்பவர் தொடர்ந்த வழக்கில், நாமக்கல் முதன்மை மாவட்ட முன்சீப் நீதிமன்றம், கோவிலுக்கு எதிராக உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து கோவில் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குறிப்பிட்ட பொது பாதையில் கோவில் நிர்வாகம் கட்டியுள்ள அனைத்து கட்டுமானங்களையும் இரு மாதங்களில் அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

அதேசமயம், பொதுசாலையை யார் ஆக்கிரமித்தாலும், கோவிலாக இருந்தாலும், அதை தடுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, கோவில் என்ற பெயரில் பொது இடத்தை ஆக்கிரமிக்கலாம் என்ற எண்ணம் சிலரிடம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடவுளே பொது இடத்தை ஆக்கிரமித்திருந்தால், அதை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவிடும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, கடவுள் பெயரால் பொது இடத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டி, நீதிமன்றத்தின் கண்களை மறைக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே போதுமான எண்ணிக்கையில் கோவில்கள் உள்ளதாக கூறியுள்ள நீதிபதி, பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோவில்களை கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version