டெங்குவை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தீவிர நடவடிக்கை எடுக்க தமிழகம் மற்றும் புதுவை அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெங்குவை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தீவிர
நடவடிக்கை எடுக்க தமிழகம் மற்றும் புதுவை அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் சென்னையில் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களால் டெங்கு பரவுவதால், அந்த வாகனங்களை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்ததார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் 402 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில் ஜூன் மாத பாதிப்பு 54 பேர் என்று பெருமளவில் குறைந்துள்ளதாக தெரிவிக்கபட்டது.

இதே போல் சென்னை மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மொத்தம் 52 பேர் மட்டுமே டெங்கு நோயின் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கபட்டது.

தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யபட்ட அறிக்கையை ஏற்றுகொண்ட நீதிபதிகள் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் டெங்குவை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க அரசிற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

You may also like...