Rmdj benchசிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வியில் மாணவர்களை சேர்க்க அனுமதி கோரிய வழக்கில், பல்கலைக்கழக மானியக் குழு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வியில் மாணவர்களை சேர்க்க அனுமதி கோரிய வழக்கில், பல்கலைக்கழக மானியக் குழு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், 1979-80ம் கல்வியாண்டு முதல் தொலைதூர கல்வியை வழங்கி வருகிறது. இதுவரை 225 பாடங்களை 1.24 லட்சம் மாணவர்களுக்கு தொலைதூர கல்வி வழங்கி வருகிறது.

இந்நிலையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைதூர வகுப்புகளை நடத்தி வருவதாகவும், அதனால் மாணவர்கள் சேர வேண்டாம் என வலியுறுத்தி, கடந்த மார்ச் 25ம் தேதி பல்கலைக்கழக மானியக் குழு பொது அறிவிப்பை வெளியிட்டது.

இந்த அறிவிப்பை ரத்து செய்யவும், அதற்கு தடை விதிக்க கோரியும் அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் அதன் பதிவாளர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், 2014-15ம் கல்வியாண்டு முதல் அங்கீகாரம் பெறவில்லை என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது எனவும், ஆண்டுதோறும் அங்கீகாரம் கோரி விண்ணப்பித்த போதும், அதன் மீது எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்து 24 ஆயிரம் மாணவர்கள் தொலைதூர கல்வியில் சேரும் நிலையில், உண்மையை தெரிந்து கொள்ளாமல் பிறப்பிக்கப்பட்ட இந்த அறிவிப்பு நியாயமற்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு, தனது அறிவிப்பை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் எனவும், தொலைதூர கல்வியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தொலைதூர கல்விக்கு அங்கீகாரம் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்த போது, கடந்த காலங்களில் உயர் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருவதாகவும், நடப்பு கல்வியாண்டில் மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கை இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என அண்ணாமலை பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி, பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை கோடை விடுமுறைக்கு பின் தள்ளிவைத்தார்.

You may also like...