Madras high court orders june 2
[6/2, 13:08] Sekarreporter: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்களை மூடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் கற்பகம் தாக்கல் செய்த மனுவில், 1,411 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் 47 சட்டவிரோத ரிசார்ட்கள் செயல்படுகின்றன என, தகவல் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய வன விலங்குகள் வாரியம், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் செயல்படும் இந்த சட்டவிரோத ரிசார்ட்கள் காரணமாக, மலைப்பகுதி சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வனப்பகுதிகளை பாதுகாக்க வேண்டுமானால், காளான் போல பரவி வரும் சட்டவிரோத ரிசார்ட்களை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ள மனுதாரர், இந்த ரிசார்ட்களை மூடும்படி உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் முகமது சபிக் அடங்கிய அமர்வு, தமிழக வனத்துறை, தேசிய வனவிலங்குகள் பாதுகாப்பு வாரியம், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் ஆகியன பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
[6/2, 18:32] Sekarreporter: திருவண்ணாமலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை வைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஜூன் 6ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையும் மாநில நெடுஞ்சாலையில் இணையும் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்க மாவட்ட திமுக சார்பில் முடிவெடுக்கப்பட்டது.
இந்த பகுதியில் சிலை வைப்பதால் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி சென்னை வேளச்சேரி யைச் சேர்ந்த பக்தர் கார்த்திக் என்பவர் சிலை வைக்க தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிலை அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த தடையை நீக்க கோரி சிலை அமைய உள்ள இடத்துக்கு உரிமையாளரான ஜீவா கல்வி அறக்கட்டளை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு நீதிபதிகள் எம்எஸ் ரமேஷ் மற்றும் முகமது ரபிக் அடங்கிய அமர்வு நேற்று விசாரணைக்கு வந்த போது, தனியார் பட்டா நிலத்தில் சிலை வைப்பதை எதிர்த்து எப்படி பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியும் என கேள்வி எழுப்பி இந்த வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்திருந்தார்கள்.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனியார் நிலமாக இருந்தாலும் சிலை வைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும், இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டி உள்ளதாககூறி விசாரணையை ஜூன் 6ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
நாளை நடத்த இருந்த சிலை திறப்பு விழாவை வேறு தேதிக்கு மாற்றவும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதன்மூலம் சிலை திறக்க தடை விதித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜெ.சத்தியநாராயண பிரசாத் ஆகியோரின் இடைக்கால உத்தரவு தொடர்கிறது.
[6/2, 19:07] Sekarreporter: மருத்துவ காரணங்களுக்காக கணவர் முருகனுக்கு 6 நாட்கள் பரோல் வழங்கக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனக்கு தமிழக அரசு பரோல் வழங்கியதால் தாய் பத்மாவுடன் தங்கியிருப்பதாகவும், ஆனால் வேலூர் சிறையில் இருக்கும் கணவர் முருகனுக்கு பரோல் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். 31 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் தங்களை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் விடுதலை தீர்மானத்தின்படி இன்னும் விடுதலை செய்யப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ காரணங்களுக்காக கணவர் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கக் கோரி மே 26ஆம் தேதி தானும், மே 21ஆம் தேதி தனது தாய் பத்மாவும் தமிழக அரசிடம் மனு அளித்ததாகவும், அவை இதுவரை பரிசீலிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தனது கணவர் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமெப மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் முகமது சபீக் அமர்வு, ஜூன் 13ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக சிறைத்துறை உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.