கோவில்பட்டியில் போலி ரசீது புத்தகம் அடித்து நன்கொடை வசூலித்த 3 பேர் கைது

*தூத்துக்குடி மாவட்டம்:*

கோவில்பட்டியில்
போலி ரசீது புத்தகம் அடித்து நன்கொடை வசூலித்த 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி
பசுபதி பாண்டியன் குரு பூஜை விழா என கூறி போலியாக நன்கொடை ரசீது புத்தகம் அச்சடித்து வசூலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பசுபதிபாண்டியன் குருபூஜை விழாவுக்கு சிலர் நன்கொடை வசூலிப்பதாக கோவில்பட்டி நகர பசுபதிபாண்டியன் பேரவை செயலாளர் கற்பகராஜ் என்பவருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் பேரவை நிர்வாகிகளுடன் சென்று, வசூலில் ஈடுபட்டவர்களிடம் விசாரித்தார். அவர்கள் பசுபதிபாண்டியன் குருபூஜை விழா என கூறி போலியாக நன்கொடை ரசீது புத்தகம் அச்சிட்டு வசூலித்து தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸார் அவர்கள் 3 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டியை சேர்ந்த வெள்ளைப்பாண்டி(39), மேலச்செவல் கிராமத்தை சேர்ந்த நாராயணகோபால்(33), தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியாபுரத்தை சேர்ந்த வீரமணி(39) என்பதும், பசுபதிபாண்டியனின் 11-ம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கப்படும் என தேவேந்திரகுல இளைஞர் அணி, தமிழ்நாடு என்று நோட்டீஸும், சி.பசுபதிபாண்டியன் பேரவை என்ற பெயரில் நன்கொடை ரசீது புத்தகமும் அச்சிட்டு வசூலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

You may also like...