ஏற்காட்டில் அமையவிருந்த மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிலையத்திற்கு மாற்றாக, கொடைக்கானலில் தேசிய

ஏற்காட்டில் அமையவிருந்த மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிலையத்திற்கு மாற்றாக, கொடைக்கானலில் தேசிய அளவிலான மையத்தை அமைக்க முடிவு எடுக்கப்பட்டதற்கான ஆவணங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களின் இளநிலை உதவியாளர் முதல் உதவி பதிவாளர் பணியிடங்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிலையத்தை சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டத்தில் உள்ள செம்மடுவு கிராமத்தில் 4.33 ஏக்கரில் 61 கோடியே 80 லட்சம் ரூபாயில் மதிப்பீட்டில் அமைக்க அதிமுக ஆட்சியில் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கூட்டுறவுத்துறை அரசாணை பிறப்பித்து கட்டுமான பணிகளும் தொடங்கப்பட்டன.
பின்னர் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, ஏற்காட்டிற்கு பதிலாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள மன்னவனூர் கிராமத்தில் தேசிய அளவிலான கூட்டுறவு மேலாண்மை படிப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தை அமைப்பது என ஆகஸ்ட் மாதம் முடிவெடுக்கப்பட்டு, ஏற்கனவே நடைபெற்று வந்த ஏற்காடு பயிற்சி நிலைய கட்டுமானப் பணிகளை நிறுத்தும்படி கூட்டுறவுத் துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்து, ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு (லேம்ப் – LAMP)கூட்டுறவு சங்கத்தின் தலைவரான ஜி. சென்றாயன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதேபோல கொடைக்கானலில் மையம் அமைப்பதற்காக வெளியிடப்பட்ட அரசாணையை எதிர்த்து மற்றொரு வழக்கும் தொடர்ந்திருந்தார்.

இந்த இரு வழக்குளும் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் சங்கம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன் ஆஜராகி,
சேலம் மாவட்டத்தில் மையத்தை அமைக்க ஆய்வு நடத்தப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட பின்னர்,திடீரென கடந்த ஜூலை மாதம் முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் தேசிய அளவிலான பயிற்சி நிறுவனம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தெரிவித்தார்.

முதலில் சேலத்தில் கட்டுமானங்களை நிறுத்த உத்தரவிட்டுவிட்டு, அதன் பின்னர் தான் கொடைக்கானலில் அமைக்கவுள்ள புதிய மையத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டதாகவும், கொள்கை முடிவெடுக்கப்பட்டதாக கூறும் நிலையில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டதற்கான ஆதாரங்களே இல்லை எனவும் வாதிட்டார்

நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையிலும் கூட சேலத்தில் நடைபெற்று கொண்டிருந்த கட்டுமானங்கள் ஏன் நிறுத்தப்பட்டது என்பதற்கான காரணங்களுக்கு விளக்கம் அளிக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய அவர்,தேசிய அளவிலான பயிற்சி நிறுவனம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை ஆனால்,அதற்காக மாநில அளவிலான பயிற்சி மையத்தை முடக்க வேண்டிய அவசியம் என்ன எனவும் கேள்வி எழுப்பினார்

தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தேசிய அளவிலான மையத்தை 20 ஏக்கர் பரப்பளவில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதென கொள்கை முடிவெடுக்கப்பட்டு, சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

தொடர்ந்து,தேசிய அளவிலான பயிற்சி நிறுவனம் அமைக்க அரசு கொள்கை முடிவு எடுத்ததாக கூறப்படும் ஆணவங்கள் மற்றும் அரசாணை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை டிசம்பர் 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like...