எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் ஏ.ஏ.நக்கீரன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், பேரணி – பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி எஸ்.டி.பி.ஐ. சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு ஜனவரி 17ம் தேதி நிராகரிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்

திருப்பூரில் ஜனவரி 22ம் தேதி பேரணி நடத்த அனுமதி கோரி எஸ்டிபிஐ அளித்த கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டு விட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்ததை அடுத்து பேரணிக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரில் யுனிவர்சல் தியேட்டர் ரவுண்டானா அருகில் ஜனவ்ரி 22ம் தேதி பேரணி பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக எஸ்டிபிஐ கட்சி அறிவித்துள்ளது.

இதற்கு தடை விதிக்கக் கோரி, இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கடந்த ஆண்டு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிறுவனரான அபூபக்கர் தான், எஸ் டி பி ஐ கட்சியின் நிறுவனராக உள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

பாஜக மற்றும் இந்து அமைப்பினர் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட வழக்கில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த சரோஸ் கான், சையத் இப்ராஹிம்
ஆகியோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் இஸ்லாமிய தலைவர்கள், விரும்பத் தகாத பேச்சுக்கள் பேசக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால், சட்டம் – ஒழுங்கு பிரச்னை மட்டுமல்லாமல், இரு மதத்திற்கும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருக்க கூடும் என்பதால் பேரணி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்க கோரி கடந்த 3ம் தேதி கொடுத்த எஸ்டிபிஐ மனுவை நிராகரிக்க, திருப்பூர் மாநகர காவல் துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் ஏ.ஏ.நக்கீரன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், பேரணி – பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி எஸ்.டி.பி.ஐ. சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு ஜனவரி 17ம் தேதி நிராகரிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

You may also like...