மதம் மாறியவருக்கு கலப்பு திருமண சான்றிதழ் வழங்கினால், பலன்களை தவறாக பயன்படுத்த கூடும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

மதம் மாறியவருக்கு கலப்பு திருமண சான்றிதழ் வழங்கினால், பலன்களை தவறாக பயன்படுத்த கூடும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த கிறிஸ்தவ ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கிறிஸ்தவ ஆதி திராவிடர் என்பதால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என சாதிச் சான்று பெற்ற அவர், தனக்கு கலப்பு மணம் புரிந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்தார்.

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மேட்டூர் வட்டாச்சியர், மதம் மாறியவருக்கு கலப்பு மண சான்று வழங்க முடியாது என கூறி, அவரது விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து பால்ராஜ் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 1997 ஆண்டு அரசாணைப்படி
மதமாறிய நபர்களுக்கு கலப்பு மண சான்றிதழ் வழங்க முடியாது என்பதால், மனுதரார் கோரிக்கையை நிராகரித்தது சரியே என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, மதம் மாறியவருக்கு கலப்பு மண சான்று வழங்க உத்தரவிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மதம் மாறுவதால் ஒருவரின் சாதி மாறுவதில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி, ஒரேசாதியையோ, வகுப்பையோ சேர்ந்த கணவன் – மனைவிக்கு கலப்பு மண சான்று பெற தகுதியில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

மதம் மாறியவருக்கு கலப்பு மண சான்றிதழ் வழங்கினால், கலப்பு மணம் புரிந்தவர்களுக்கான சலுகைகள் தவறாக பயன்படுத்தக் கூடும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

You may also like...