மணிப்பூர் நிதி ஒதுக்கீட்டு மசோதா மீது கழக மாநிலங்களவை உறுப்பினர் திரு.பி.வில்சன் எம்.பி அவர்களது உரை.

மணிப்பூர் நிதி ஒதுக்கீட்டு மசோதா மீது கழக மாநிலங்களவை உறுப்பினர் திரு.பி.வில்சன் எம்.பி அவர்களது உரை.
இந்தியா எனது தாய்நாடு.. இந்தியர் யாவரும் எனது சகோதர – சகோதரிகள் என்ற தேசிய உறுதிமொழியை உச்சரித்துக் கொண்டேதான் பள்ளி நாட்களில் நாம் வளர்ந்தோம்.
ஆனால், இன்று அரசாங்கம் உண்மையிலேயே இந்த வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதா என்று கேட்க விரும்புகிறேன்.. ஏனெனில், ஒன்றிய அரசாங்கமானது இந்த வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொண்டிருக்குமேயானால், மணிப்பூர் மக்களுக்கு ஆதரவாக இருந்திருப்பார்கள், அவர்களின் கடினமான நேரத்தில் அவர்களுக்கு உதவியிருப்பார்கள்.. அவர்களின் கண்ணீரைத் துடைத்திருப்பார்கள்.. அவர்களின் வீடுகளை மறுகட்டமைப்பு செய்து அளித்து அவர்களது கண்ணியத்தை காத்திருப்பார்கள்.. ஆனால், இந்த அரசாங்கம் என்ன செய்தது? அவர்களைக் கைவிட்டுவிட்டது. அவர்களைத் தூக்கி எறிந்துவிட்டது. கடினமான காலத்தில் அவர்களை ஏமாற்றி விட்டது. 2023 மே மாதம் தொடங்கிய இனக்கலவரமானது உள்நாட்டுப் போராக வடிவெடுத்து 22 மாதங்கள் கடந்தும் இன்று வரை அது முடிவுக்கு வரவில்லை. மணிப்பூரானது பற்றி எறிந்தபோது, இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டபோது, வீடுகள் சாம்பலாக்கப்பட்ட போது, குழந்தைகள் பாதுகாப்புக்காக அழுதபோது, பெண்கள் மிகவும் மனிதாபிமானமற்ற முறைகளில் கொடுமைப்படுத்தப்பட்ட போது, நமது பிரதமர் அவர்கள் எங்கே இருந்தார்? அவர் மணிப்பூரில் இல்லை. அவர்களது தலைவர் அவர்களுக்குத் தேவைப்பட்ட நேரத்தில் அந்த மக்களுடன் அவர் இல்லை.

அவர் வெளிநாட்டில் கைகுலுக்கிக்கொண்டு இருந்தார். வாக்கு சேகரித்துக்கொண்டிருந்தார். தேர்தல் பிரச்சாரங்களை நடத்திக்கொண்டிருந்தார்.
ஆனால், அவருக்கு மணிப்பூருக்குச் சென்று அந்த மக்களிடம் நான் உங்களுக்குத் துணை நிற்கிறேன் என்று சொல்வதற்கு நேரமோ அல்லது தைரியமோ இருந்திடவில்லை.
ஒட்டு மொத்த மணிப்பூர் மாநிலமும் மற்ற அனைத்து மாநிலங்களில் இருந்தும் துண்டிக்கப்பட்டது மற்றும் மணிப்பூருக்குள் நுழைய யாரும் அனுமதிக்கப்படவில்லை. அங்கு இணைய வசதிகள், மின்சாரம், குடிநீர், உணவு என்று எதுவுமே இல்லை. பாலியல் வன்கொடுமை மற்றும் கற்பழிப்புக்காக ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கிட்டத்தட்ட 14 நாட்கள் ஆனது. இப்போது, நிவாரண முகாம்களுக்கு ₹ 400 கோடியையும், ஒரு பாதுகாப்பு நிதியை நிறுவ 500 கோடி முதலீட்டு நிதியையும் அவர்கள் அறிவிக்கிறார்கள், அதுவும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 7,000 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கிறார்கள். தங்கள் வீடுகள் தீக்கிரையாவதைப் பார்த்தவர்களின் வாழ்க்கையை இந்த பணத்தால் மீண்டும் கட்டியெழுப்ப முடியுமா? என்பதை நீங்கள் சொல்லுங்கள்.. கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட அவர்களின் அன்புக்குரியவர்களை மீண்டும் கொண்டு வர முடியுமா? பெண்களின் கண்ணியம் பறிக்கப்பட்டு, சொந்த மண்ணில் எதோ உயிரற்ற பொருட்களைப் போல ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அப்பெண்களின் காயங்களை இந்த பணத்தால் ஆற்ற முடியுமா? மணிப்பூர் மாநிலத்தில் 60,000 க்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்கள், உயிர் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள், உள்நாட்டில் இடம்பெயர்ந்த நபர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு, தற்காலிக தங்குமிடம், இடம்பெயர்ந்த மக்களுக்கு வீட்டுவசதி கட்டுதல் போன்றவற்றை நிறைவேற்ற இந்த நிதி ஒதுக்கீடானது உண்மையில் போதுமானதாக இல்லை.
மணிப்பூரின் உண்மை இதுதான் :
300 க்கும் மேற்பட்ட அப்பாவி உயிர்கள் பறிபோயுள்ளன. கலவரம் தொடங்கிய 36 மணி நேரத்திற்குள் 249 தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன மற்றும் இதுவரை 400 தேவாலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அதிர்ச்சியூட்டும் வகையில் மதிப்பிடப்பட்ட மொத்த சேதம் என்பது, சம்பிரதாயமாக வழங்கப்படும் சொற்ப உதவியை விட மிக அதிகமாக ரூ.20,000 கோடி ஆகும். வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் மிக அதிக பணவீக்கம், வேலையின்மை, அமைதியின்மை மற்றும் வறுமை அதிகரித்து வருகிறது, பொருளாதாரம் விரிவடைந்தாலொழிய இந்தப் பிரச்சினைகள் எவற்றையும் தீர்க்க முடியாது. வெற்றுக்கூச்சல் மணிப்பூரின் வலியைத் தீர்க்காது. வெறுமனே ஒப்புக்கொள்வதால் அதன் காயங்கள் ஆறாது. மணிப்பூரில் அமைதி வேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே விரும்பினால், அந்த மக்களின் கருத்துக்களைக் கேளுங்கள். மூடிய அறைக்குள் நடக்கும் கூட்டங்களில், அதிகார வர்க்க அறிக்கைகளில் அல்லாமல், மக்களுடன் களத்தில், மணிப்பூரின் தெருக்களில், அந்த மக்களின் வீடுகளில், அவர்களின் துயரத்திற்கு மத்தியில்தான் தீர்வு காண முடியும். அவர்களின் அபிலாஷைகள், அவர்களின் அச்சங்கள், அவர்களின் வேதனையைக் கேளுங்கள். நீங்கள் உண்மையிலேயே அமைதியை விரும்பினால், உண்மையை எதிர்கொள்ள தைரியமாக இருங்கள், அது எவ்வளவு சிரமமாக இருந்தாலும்..
ஒன்றை தெளிவாகச் சொல்லுகிறேன். இது மணிப்பூர் மக்களுக்கு எதிரான குற்றம் மட்டுமல்ல; இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம், நமது தேசத்தின் கட்டமைப்புக்கு எதிரானது.
பெண் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள் என்று முழக்கமிடும் ஒரு அரசாங்கம், மணிப்பூரின் மகள்கள் கொடுமைப்படுத்தப்படும்போது, பாலியல் பலாத்காரம் செய்யப்படும்போது, சித்திரவதை செய்யப்படும்போது மௌனமாக இருப்பது நிச்சயமாக சரியல்ல. இது ஒரு பெண்ணைப் பற்றிய கதை மட்டுமல்ல. ஒரு மாநிலத்தின் துன்பம் மட்டுமல்ல. இது நமது தேசத்தின் ஆன்மாவில் படிந்த கறை.
அதேபோன்று, ரூபாய் நோட்டுகளில் ரூபாய் என்கிற தமிழ் வார்த்தை உள்ளது என்பதை மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். எனவே, எங்களுடைய தமிழ்நாடு பட்ஜெட்டில் ரூ எனும் தமிழ் வார்த்தையை பயன்படுத்துவதில் எந்தவித தவறும் இல்லை.
மணிப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பவும், அந்த மாநிலத்திற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவும் மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் அவர்கள் கருணை காட்ட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
CALL ME