பஞ்சாயத்து தலைவர் பதவியை பொதுப் பிரிவினருக்கு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையை மாநில தேர்தல் ஆணையம்

வேலூர் மாவட்டம் அம்முண்டி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவியை பொதுப் பிரிவினருக்கு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையை மாநில தேர்தல் ஆணையம் பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்தமாதம் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்முண்டி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அம்முண்டி கிராமத்தில் பட்டியலின, பழங்குடியின குடும்பத்தினர் எவரும் இல்லை எனக் கூறி, அதனால் பஞ்சாயத்து தலைவர் பதவியை பொதுப் பிரிவினருக்கு ஒதுக்க கோரி அந்த கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, ஆயிரத்து 701 பேர் வசிக்கும் அம்முண்டி கிராமத்தில் 284 பட்டியலினத்தவர்களும், 11 பழங்குடியினத்தவர்களும் வசிப்பதாக தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்வேந்திரன் தெரிவித்தார்.

தற்போது நடக்க உள்ள தேர்தலில் யாரும் போட்டியிட வில்லை எனவும், பஞ்சாயத்து தலைவர் பதவியை பொதுப் பிரிவினருக்கு ஒதுக்க கோரி தமிழக அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் மனு அளித்துள்ளதாக, மனுதாரர் தரப்பில் ஆஜரான கே.பாலு தெரிவித்தார்.

இதற்கு மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், அடுத்த ஆறு மாதங்களில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அம்முண்டி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவியை பொதுப் பிரிவினருக்கு மாற்றக் கோரி மனுதாரர் அளித்த மனுவை 12 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

You may also like...